Published : 13 Aug 2015 08:47 AM
Last Updated : 13 Aug 2015 08:47 AM
தமிழகத்தில் அரசு மருத்துவமனை களில் முதியோர்களுக்கு சிறப்பு வார்டுகள் அமைக்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை ஏ.ஆறுமுகம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முதியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தனி வார்டுகள் இல்லை. இதனால், பல முதியவர்கள் உரிய சிகிச்சை பெற முடியாமல் போகிறது. வாரிசுகள், உறவினர்களால் முதியவர்கள் கைவிடப்படுகின்றனர். இதனால் முதியோர் பாதுகாப்புக்காக மத்திய அரசு 2007-ம் ஆண்டிலும், மாநில அரசு 2009-ம் ஆண்டிலும் முதியோர் பாதுகாப்பு சட்டங்களை நிறைவேற்றியது.
இச்சட்டங்களின் அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் முதியோருக்கு தனி வார்டு அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு 2012-ல் மனு அனுப்பினேன். அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதியோருக்கு சிறப்பு வார்டு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைச் செயலரின் பதில் மனுவை அரசு சிறப்பு வழக்கறிஞர் கோவிந்தன் தாக்கல் செய்தார்.
அதில், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் முதியோருக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. திங்கள், வெள்ளிக்கிழமைகளில் முதியோ ருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.. மருந்து, மாத்திரைகள் பெற தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தலைமைச் செயலர், உள்துறை, சமூநலத்துறை செயலர்கள், மாநில மூத்தோர் கவுன்சில் ஆணையர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT