Published : 08 Jan 2020 09:41 AM
Last Updated : 08 Jan 2020 09:41 AM
நீதிபதி எனக் கூறி, ரூ.21 லட்சம் மோசடி செய்ததாக சென்னை நுகர்வோர் நீதிமன்ற முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் அருகே உள்ள வள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டில் சென்னையைச் சேர்ந்த நுகர்வோர் நீதிமன்ற முன்னாள் உறுப்பினர் சுப்புராஜ் என்பவர் அறிமுகமாகி உள்ளார். வேலுச்சாமியை ஒரு வழக்கிலிருந்து விடுவிக்க, தான் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி எனக்கூறி வேலுச்சாமியிடமிருந்து சுப்புராஜ் ரூ.21 லட்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அதன்பின் வேலுச்சாமி பணத்தை திருப்பிக்கேட்டபோது சுப்புராஜ் காசோலை கொடுத்துள்ளார். ஆனால், வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி உள்ளது. இதையடுத்து, விருதுநகரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் வேலுச்சாமி புகார் கொடுத்தார். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கும் பின்னர், ராஜபாளையத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டது. ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து சுப்புராஜுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அவரை கைதுசெய்ய சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையியில், சென்னையில் கைதுசெய்யப்பட்ட சுப்புராஜ், ராஜபாளையத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். சுப்புராஜை இம்மாதம் 21-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் வெற்றிமணி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT