பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழு சர்ச்சை: மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வலது: பாலமேடு வாடிவாசல், இடது: மதுரை உயர் நீதிமன்ற கிளை
வலது: பாலமேடு வாடிவாசல், இடது: மதுரை உயர் நீதிமன்ற கிளை
Updated on
1 min read

பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை பாலமேடு பகுதியைச் சேர்ந்த சந்தானம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"ஆண்டுதோறும் தை இரண்டாம் நாள் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். பாலமேடு 15 வார்டுகளைக் கொண்ட பேரூராட்சியாக உள்ளது. இங்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வரும் நிலையில், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

இந்த ஆண்டும் வழக்கம் போல தை 2-ம் தேதி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான விழா குழுவில் ஆதிதிராவிட (பறையர்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படவில்லை.

ஆனால் ஆதிதிராவிட சமூகத்தினரிடம் இருந்து நன்கொடைகள் உள்ளிட்டவை மட்டும் பெறப்பட்டுள்ளன. ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவர்கள் 10 காளைகளை வளர்த்து வருவதோடு, தொடர்ந்து ஜல்லிக்கட்டில் பங்கேற்று வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு விழாவில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு வழங்குவதற்காக பெறப்படும் நன்கொடைகள் கோடி கணக்கில் உள்ளன.
ஆனால் அவை தொடர்பான கணக்குகளை முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை. ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் அமைதி குழு அமைத்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, இது குறித்து மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in