Published : 07 Jan 2020 03:48 PM
Last Updated : 07 Jan 2020 03:48 PM

ரஜினியின் ‘தர்பார்’ படத்தை மலேசியாவில் வெளியிட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை 

நடிகர் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாகவுள்ள ‘தர்பார்’ படம் வெளியாக ரூ.4.9 கோடி வங்கி உத்தரவாதம் செலுத்தாவிட்டால் படத்தை வெளியிடத் தடை விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்துக்குத் தடை விதிக்கக் கோரி மலேசியாவைச் சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “நடிகர் ரஜினிகாந்த நடித்த '2.0' படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்திடம் இருந்து, எங்கள் நிறுவனம் மலேசிய விநியோக உரிமையை 20 கோடி ரூபாய்க்குப் பெற்றது. அதுமட்டுமல்லாமல் '2.0’ படத்தயாரிப்புக்கு 12 கோடி ரூபாயை ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்குக் கடனாக லைகா நிறுவனத்திற்கு வழங்கினோம்.

அந்தத் தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயாக தங்களுக்கு லைகா நிறுவனம் வழங்க வேண்டி இருப்பதால், அந்தத் தொகையை வழங்காமல் ‘தர்பார் ’ படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன் கடந்த 3-ம் தேதி இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனம் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

லைகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ''மலேசிய நிறுவனம் கூறுவது போல் எந்தக் கடனும் லைகா நிறுவனம் தரப்பில் தர வேண்டியது இல்லை. மனுதாரர் உள்நோக்கத்துடன் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். மனுதாரர் கூறிய அனைத்துக் குற்றச்சாட்டுகளும் தவறானவை. மேலும் அற்ப காரணங்களுக்காக இந்த வழக்கை மனதாரர் தொடர்ந்துள்ளார்.

மனுதாரர்தான் எங்கள் நிறுவனத்திற்கு ரூ.1 கோடியே 45 லட்சம் அளிக்க வேண்டும். எனவே தர்பார் படத்திற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''தங்களுக்குத் தரவேண்டிய தொகைக்குப் பதிலாக ரஜினியின் ‘காலா’ படத்தின் சிங்கப்பூர் உரிமையை அளித்துள்ளதாக பதில் மனுவில் தெரிவித்துள்ளனர். ஆனால் அது போன்ற எந்த ஒப்பந்தம் செய்யவில்லை. அவர்கள் கூறும் அனைத்துக் கணக்குகளும் தவறு'' எனத் தெரிவித்தார்.

லைகா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எங்கள் நிறுவனம் பெற்ற கடனுக்கு ‘காலா ’ படத்தின் சிங்கப்பூர் வெளியீட்டு உரிமை அளித்ததாகவும் அதற்கான ஒப்பந்தம் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்னர் அனைத்துத் தரப்பு வாதங்களுக்குப் பிறகும் வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், 'தர்பார்' திரைப்படத்தை மலேசியா நாட்டில் வெளியிடத் தடை விதிப்பதாக உத்தரவிட்டார்.

''மலேசியாவில் படத்தை வெளியிட வேண்டும் என்றால் 4.9 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதம் உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். டெபாசிட் செய்யும் வரை படத்தை மலேசியாவில் வெளியிடக் கூடாது. பணத்தை டெபாசிட் செய்யும் பட்சத்தில் மலேசியாவில் படத்தை வெளியிடலாம்'' என அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் மூலமாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் வெளியிட எந்த விதமான தடையும் இல்லை. மலேசியாவைத் தவிர பிற நாடுகளிலும் வெளியிடத் தடையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x