Last Updated : 07 Jan, 2020 01:27 PM

 

Published : 07 Jan 2020 01:27 PM
Last Updated : 07 Jan 2020 01:27 PM

ஜேஎன்யு மாணவர் தாக்குதலை கண்டித்து புதுச்சேரியில் மறியல்; தள்ளுமுள்ளு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் புதுச்சேரியில் மறியலில் ஈடுபட முயன்ற அனைத்திந்திய பெருமன்றத்தினரை போலீஸார் கைது செய்தனர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் பல்வேறு மாணவர்கள், பேராசிரியர்கள் காயமடைந்தனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (ஜன.7) புதுச்சேரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ( (ஏ.ஐ.எஸ்.எஃப்.) மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (ஏ.ஐ.ஒய்.எஃப்.) ஆகிய அமைப்புகள் சார்பில் டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

காமராஜர் சிலை சந்திப்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், மத்திய பாஜக அரசை கண்டித்தும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், உடனடியாக அவர்களை கைது செய்ய முற்பட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 14 பேரை போலீஸார் கைது செய்தனர். மறியல் போராட்டம் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x