Published : 07 Jan 2020 08:45 AM
Last Updated : 07 Jan 2020 08:45 AM

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது: தற்போது வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 8-ம் தேதிக்கு மேல் வறண்ட வானிலை நீடிக்கும்.

திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 3 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், திருத்தணி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ., விருத்தாச்சலம், மணிமுத்தாறு, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, பள்ளிப்பட்டு, எண்ணூர், பொன்னேரி, சேலம் மாவட்டம் தம்மம்பட்டி ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x