Published : 06 Jan 2020 10:03 PM
Last Updated : 06 Jan 2020 10:03 PM

சு.வெங்கடேசனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ‘இயல் விருது 2019’

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு வழங்கி வரும் சர்வதேச விருதுகளில் முதன்மையானது ‘இயல் விருது’. தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்பட்டு வரும் இவ்விருதை, 1989 தொடங்கி, இன்றுவரை தமிழ் இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கி வரும் கவிஞரும், எழுத்தாளரும் அரசியல்வாதியுமான சு.வெங்கடேசனுக்கு வழங்கியிருக்கிறது கனடா இலக்கியத் தோட்டம்.

சு.வெங்கடேசன், மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் சுப்புராம்- நல்லம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். 12-ம் வகுப்பு விடுமுறையில் தனது முதல் கவிதை நூலினை வெளியிட்டுள்ளார். இளங்கலை வணிகவியல் படித்தவர். இதுவரை 4 கவிதைத் தொகுப்புகள், 5 கட்டுரைத் தொகுப்புகள், 2 புதினங்கள், ஒரு கிராஃபிக் நாவல் எழுதியிருக்கிறார்.

இவர் எழுதிய முதல் நாவலான ‘காவல்கோட்டம்’ நூலுக்கு 2011-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருது வழங்கப்பட்டது. இந்தவிருதை பெற்ற எழுத்தாளர்களில் ஆக இளம் வயதினர் சு. வெங்கடேசன் என்ற பெருமை அவருக்குண்டு. முதல் நாவலுக்கே இவ்விருதினைப் பெற்ற முதல் எழுத்தாளர் இவரே.

இந்நாவல் மதுரையின் காவல் உரிமையை மையப்படுத்தியது. சுமார் 600 ஆண்டுகாலப் பயணத்தினூடே மதுரையின் காவல் உரிமை கைமாறிய கதையை விரிவாகப் பேசுகிற நாவல். காலனிய அரசதிகாரமும் மக்கள் திரளின் உரிமையும் நேர்நிலையில் நின்று மோதும்போது உருவாகும் கொந்தளிப்பை பெரும் சித்திரமாக விரித்துள்ள நாவல்.

வசந்தபாலன் இயக்கத்தில் 2012-ல் வெளிவந்த ‘அரவான்’ திரைப்படம் இந்த நாவலின் முக்கிய பகுதிகளைத் தழுவியே படமாக்கப்பட்டது. ‘காவல் கோட்டம்’ பற்றி வெங்கடேசன் இவ்வாறு சொல்கிறார்.

“நாவல் எழுதத் தொடங்கியபோது என் மூத்த மகள் யாழினி பிறந்தார். எழுதி முடித்தபோது அவர் என் தோளுக்கு இணையாக வளர்ந்திருந்தார். நாவலுக்காக 10 ஆண்டுகள் உழைத்தேன். இதற்காக நான் இழந்தததுஅதிகம்’’.

இவர் ஆனந்த விகடனில் 111 வாரங்கள் எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’யின் தொடரை வாசகர்கள் தமிழக இலக்கிய சரித்திரத்தில் இதுவரை காணாத வகையில் வரவேற்றார்கள். உலகெங்கும் இருந்து வாசகர்கள் அடுத்த வாரத்துக்காக ஏங்கிக் காத்திருந்தார்கள். இவருடைய புகழ் தமிழ் உலகம் முழுக்கப் பரவ இந்த நாவல் காரணமாக இருந்தது. சங்க இலக்கியத்தில் சில வரிகளில் அறியப்பட்ட வள்ளலும், வேளிர் குலத்தலைவனுமான பாரியை சேர சோழ பாண்டிய மன்னர் மூவரும் ஒன்றிணைந்து போர் தொடுத்தும் தோற்கடிக்க முடியாத கதையை இந்த நாவல் சொல்கிறது. இதனுடைய வெற்றி இன்று தமிழ் உலகமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இவர் மார்க்ஸிய பொதுவுடமைக் கட்சியின் முழுநேர ஊழியர். அத்துடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர். 2019-ல் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மதுரைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றவர்.

‘தமிழ் நாகரிகம் உருவான காலத்தை பள்ளிப் பாடப் புத்தகத்தில் கி.மு.ஆறாம் நூற்றாண்டு என மாற்ற வேண்டும்.’,‘சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் ஒருவித போட்டியும் கிடையாது. சமஸ்கிருதம் தமிழிலும் பார்க்க 700 வருடங்கள் இளமையானது. நாம் ஏன் இளமையான ஒருமொழியுடன் சண்டைபோடப் போகிறோம்’ என்பன உள்ளிட்ட இவருடைய நாடாளுமன்ற உரைகள் புகழ் வாய்ந்தவை. இவர் நாடாளுமன்றத்தில் தமிழின் மேன்மைக்காக வைத்து வரும் கோரிக்கைகளும், அவதானிப்புகளும் தொடர்ந்து வருகின்றன. இவர் மக்களைக் கவர்ந்திழுக்கும் பேச்சாற்றல் கொண்டவர்.

சு.வெங்கடசேன் தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மேடைகளில் தமிழின் மேன்மையைப் பரப்பி வருகிறார். தமிழின் தொன்மை பற்றியும், கீழடி ஆய்வுதரவுகளின் தாக்கம் பற்றியும் தொடர்ந்து விழிப்புணர்வுச் சொற்பொழிவுகள் ஆற்றுகிறார்.

இவர் தன் மனைவி பி.ஆர்.கமலாவுடனும், பிள்ளைகள் யாழினி, தமிழினி உடனும் மதுரையில் வசித்து வருகிறார். இயல் விருது வழங்கும் விழா கனடா நாட்டின் தலைநகரான டொரண்டோ மாநகரில் 2020 ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x