Published : 06 Jan 2020 06:57 PM
Last Updated : 06 Jan 2020 06:57 PM

இடைத்தரகர் இல்லாமல் எளிய முறையில் கழிவுநீர் இணைப்பு; 10 சுலபத் தவணைகளில் கட்டணம்:  குடிநீர் வாரியத்தின் ‘அழைத்தால் இணைப்பு’ திட்டம்

கழிவுநீர் இணைப்பிற்கான கட்டணத்தை உடனடியாகச் செலுத்தத் தேவையில்லை. மாதத் தவணையாகக் கட்டலாம். தொலைபேசி வாயிலாக அல்லது இணைய தளம் மூலமாக பதிவு செய்தால் போதும். பொதுமக்கள் கழிவுநீர் இணைப்பைப் பெற கோரிக்கை விடுத்த 15 நாட்களுக்குள் கழிவுநீர் இணைப்பு கொடுக்கப்படும் போன்ற பல சிறப்பம்சங்களை குடிநீர் வாரியம் அமல்படுத்தியுள்ளது.

இதுகுறித்து குடிநீர் வாரியம் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் இல்லங்களில் எளிய முறையில் கழிவுநீர் இணைப்பு பெற்றிட 'அழைத்தால் இணைப்பு' மற்றும் 'இல்லந்தோறும் இணைப்பு' என்ற இரண்டு புதிய திட்டங்கள் 02.12.2019 முதல் சென்னை குடிநீர் வாரியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

'அழைத்தால் இணைப்பு திட்டம்' சென்னை பெருநகர மாநகராட்சி எல்லைக்குட்பட்ட G+1, G+2 மற்றும் Stilt+3 தளம் வரையுள்ள கட்டிடங்களுக்கு கழிவுநீர் இணைப்பு பெற, குடிநீர் வாரியத்திற்கு 044-45674567 தொலைபேசி மூலமாகவோ அல்லது சென்னை குடிநீர் வாரிய இணையதளம் மூலமாகவோ அல்லது நேரிலோ பதிவு செய்தவுடன் எவ்வித ஆவணங்களும் இன்றி எளிய முறையில் கழிவுநீர் இணைப்பு வழங்கப்படும்.

* 'இல்லம் தோறும் இணைப்பு திட்டம்' இத்திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யபட்ட சென்னை பெருநகர மாநகராட்சி எல்லைக்குட்பட்ட புதியதாக பாதாள சாக்கடை கட்டமைப்புச் செயல்பாட்டில் உள்ள தெருக்களில் கழிவுநீர் இணைப்பு இல்லாத G+1, G+2 மற்றும் Stilt+3 தளம் வரையுள்ள அனைத்துக் கட்டிடங்களுக்கும், வீடுகளுக்கும் சென்னை குடிநீர் வாரியத்தால் தானாகவே முன்வந்து கழிவுநீர் இணைப்பு வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம், பொதுமக்கள், கழிவுநீர் இணைப்பு கொடுத்த பின்பு, சென்னை குடிநீர் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய கழிவுநீர் இணைப்பிற்கான அனைத்துக் கட்டணத் தொகையை ஒரே தவணையில் முழுமையாகவோ அல்லது ஐந்து வருடத்திற்குள் 10 தவணைகளாகவோ வட்டியில்லாமல் வரி மற்றும் குடிநீர் கட்டணத்துடன் சேர்த்து செலுத்த ஏதுவாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

திட்டத்தின் பயன்பாடுகள்:

* பயனாளிகள் கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு எந்த ஆவணங்களும் முன்னரே சமர்ப்பிக்கத் தேவையில்லை. இணைப்பு வழங்கிய பின்னர் சமர்ப்பித்தால் போதுமானது.

* கழிவுநீர் இணைப்பிற்கான கட்டணத்தை உடனடியாக செலுத்தத் தேவையில்லை.

* தொலைபேசி வாயிலாக அல்லது இணையதளம் மூலமாக பதிவு செய்தால் போதும்.

* பொதுமக்கள் கழிவுநீர் இணைப்பைப் பெற அனுமதி வேண்டி எந்தத் துறையையும் அணுக வேண்டியது இல்லை.

* கோரிக்கை விடுத்த 15 நாட்களுக்குள் கழிவுநீர் இணைப்பு கொடுக்கப்படும்.

* கழிவுநீர் இணைப்பு கொடுத்த பின் 24 மணிநேரத்திற்குள் சாலை வெட்டுக்களை சென்னை குடிநீர் வாரியமே தரமாகச் சரி செய்து போக்குவரத்திற்கு உகந்த சாலைகளாக மாற்றப்படும்.

* மழைநீர் சேகரிப்பு அமைப்பு இல்லாத/ முறையாக அமைக்கப்படாத வீடுகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் கட்டமைப்பு ஏற்படுத்தி, அதற்குண்டான செலவினங்களை 10 தவணைகளில் வசூல் செய்யப்படும்.

தமிழக முதல்வர் அறிவித்த கழிவுநீர் இணைப்பு பெற, நுகர்வோர் எந்த ஒரு தனிப்பட்ட வெளிநபர்கள், அமைப்பு சார்ந்த உறுப்பினர்கள், சென்னை குடிநீர் வாரியப் பணியாளர்கள், இணைப்பு தரும் வேலையாட்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் இடைத்தரகர்கள் யாரையும் அணுக வேண்டாம்.

இதன் தொடர்பாக பொதுமக்கள் சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்திட வேண்டிய வரையறுக்கப்பட்ட இணைப்புக் கட்டணம் தவிர, பிற நபர்களுக்கு கையூட்டாகப் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்”.

இவ்வாறு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x