Published : 06 Jan 2020 03:44 PM
Last Updated : 06 Jan 2020 03:44 PM

என் விருப்பத்தின் பேரிலேயே நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கிறேன்: தாயாரின் ஆட்கொணர்வு மனுவில் மகன் பதில் 

நித்யானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதக் காவலில் இல்லை என்றும், விருப்பப்படியே இருப்பதாகவும் ஈரோட்டைச் சேர்ந்த பிராணாசுவாமி கூறியதால், அவரை மீட்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்ற பல் மருத்துவர் கடந்த 2003-ம் ஆண்டு சேர்ந்தார். அங்கு அவருக்கு பிராணாசுவாமி எனப் பெயர் சூட்டப்பட்டது.

சமீபத்தில் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சீடர்கள் தாக்கப்பட்டனர். இதையடுத்து அவரைச் சந்திக்கச் சென்ற தனக்கு பிடதி ஆசிரமத்தினர் அனுமதி வழங்கவில்லை எனவும், சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை மீட்க வேண்டும் எனக் கோரியும் அவரது தாய் அங்குலட்சுமி ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

தொடர் விசாரணையில் உள்ள இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் ஆர்.பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ப்ராணாசுவாமியை காவல்துறையினர் நீதிமன்றத்தில் அஜர்படுத்தினர்.

அப்போது நீதிபதிகள் அவரிடம் தாயாரின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்டனர். அதற்குப் பதிலளித்த ப்ராணாசுவாமி, தனது விருப்பத்தின் பேரிலேயே நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருப்பதாகவும், யாரும் தன்னைக் கட்டாயபடுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

ப்ராணாசுவாமி தன் விருப்படியே இருப்பதாகவும், சட்டவிரோதக் காவலில் இல்லை என்பதாலும் அவரது தாயார் அங்குலட்சுமி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x