Last Updated : 06 Jan, 2020 03:25 PM

 

Published : 06 Jan 2020 03:25 PM
Last Updated : 06 Jan 2020 03:25 PM

அருப்புக்கோட்டை மோதல் குறித்து உரிய நேரத்தில் போலீஸுக்கு தகவல் தராத தலையாரிகள் சஸ்பெண்ட்: ஆட்சியர் நடவடிக்கை

அருப்புக்கோட்டை மோதல் குறித்து உரிய நேரத்தில் அதிகாரிகளுக்கு தகவல் தராத தலையாரிகளை பணி இடைநீக்கம் செய்து விருதுநகர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கடந்த 3-ம் தேதி இரவு இரு தரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கலவரத்தை கட்டுப்படுத்தி அத்துடன் இது தொடர்பாக 40-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

இந்நிலையில் மோதல் குறித்து உயர் அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் தகவல் தராத செங்குளம் கிராம உதவியாளர் ( தலையாரி) சிவக்குமார் பரளச்சி கிராம உதவியாளர் பாண்டியன் இருவரையும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

நடந்தது என்ன?

முன்னதாக, கடந்த ஜனவரி 3-ம் தேதி அருப்புக்கோட்டை அருகே உள்ள செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் கார்களில் மதுரை சென்று கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து பரளச்சி வழியாக அதே இரவு ஊர் திரும்பியுள்ளனர்.

அப்பொழுது பரளச்சி காவல் நிலையம் அருகே வந்த போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கார்களின் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் கார்களில் வந்த சுமார் 10 பேர் காயம் அடைந்தனர்.

அதையடுத்து செங்குளம் கிராமத்தினருக்கும் பரளச்சியில் வசிக்கும் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியது.

தகவலறிந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த முடியாததால் டிஎஸ்பி வெங்கடேஷ் துப்பாக்கியால் 2 முறை வானத்தை நோக்கிச் சுட்டு கலவரத்தை கட்டுப்படுத்தினார்.

அதையடுத்து எஸ்.பி. பெருமாள், மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து கீழ பரளச்சி சேர்ந்த 24 பேரையும், செங்குளத்தைச் சேர்ந்த 23 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x