மனநல மருத்துவ படிப்பு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனநல மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரங்கநாயகி என்பவர் தொடர்ந்த வழக்கில், ‘‘உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுப்படி ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு ஒரே ஒரு மன நல மருத்துவர்இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல தேசிய மனநல மருத்துவம் மற்றும் நரம்பு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், மன அழுத்தம் காரணமாகவும், மனநோய் காரணமாகவும் ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக தெரியவந்துள்ளது.

ஆனால் மன நலம் சார்ந்த படிப்புக்களுக்கு 2 முதல் 4 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவதாகவும், பல மருத்துவக் கல்லூரிகளில் மனநல மருத்துவ துறையே இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனநல மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கவும், அத்துறை இல்லாத கல்லூரிகளில் மனநல மருத்துவ துறையை தொடங்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு இதுதொடர்பாக மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் பிப்.26-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in