Published : 05 Jan 2020 10:32 AM
Last Updated : 05 Jan 2020 10:32 AM

கலப்பட உணவுகள் விற்பது குறித்து 3 ஆண்டுகளில் 11 ஆயிரம் புகார்கள்: 24 மணி நேரத்தில் தீர்வு காண்பதாக அதிகாரிகள் தகவல்

கோப்புப்படம்

சென்னை 

கலப்படம், தரமற்ற உணவு விற்பனை செய்யப்படுவதாக தமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளில் 11,681 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகார்கள் மீது 24 மணி நேரத்தில் தீர்வு காணப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் கலப்படம், சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனை தொடர்பாக புகார் தெரிவிக்க கடந்த 2017-ம் ஆண்டு மே 17-ம் தேதி 9444042322 என்ற வாட்ஸ்அப் எண் தொடங்கப்பட்டது. நுகர்வோரும் ஆர்வத்துடன் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

இதன்படி, கடந்த 2017-ம் ஆண்டு 1,227 புகார்களும் 2018-ல் 5,345 மற்றும் 2019-ல் 5,109 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3ஆண்டுகளில் மொத்தமாக 11,681 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுகாதரமற்ற உணவுகள், கெட்டுப்போன இறைச்சிகள், மீன் விற்பனை, நெய், தேயிலை தூள் உள்ளிட்டவற்றில் கலப்படம், தடை செய்யப்பட்ட குட்கா, பான் விற்பனை உள்ளிட்ட பல்வேறு வகையான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வாட்ஸ் அப் எண்ணில் பெறப்படும் புகார்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலகர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அவர்கள், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களின் மூலம் கள ஆய்வு செய்கின்றனர். கலப்படம், சுகாதாரமற்ற உணவு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மாதிரிகளை பரிசோதனை செய்து கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டால் நோட்டீஸ் அனுப்பி சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். நுகர்வோரும் ஆர்வமுடன் புகார்களை அளித்து வருகின்றனர். 24 மணி நேரத்தில் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இவ்வாறு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x