Published : 04 Jan 2020 07:35 PM
Last Updated : 04 Jan 2020 07:35 PM

  சென்னையில் சாலையை மறைக்கும் மூடுபனி: என்ன காரணம்?- வானிலை ஆய்வு மையம் விளக்கம்

சென்னையில் அதிகாலையில் எதிரில் வரும் வாகனம்கூட தெரியாத அளவுக்கு சாலையில் மூடுபனி உள்ளது. சூரிய வெளிச்சம் வந்தப்பின்னரே விலகும் இந்த மூடுபனி வர என்ன காரணம் எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“தற்போது வங்கக் கடலில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றின் வலு குறைந்துள்ளது. மேற்கு திசையில் இருந்து வீசும் நிலக்காற்றும் வலு குறைந்து காணப்படுகிறது. நிலப்பகுதியில் இருந்து உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறைவது இயல்பான நிலையாகும்.

ஆனால் தற்போது தரை பகுதியில் இருந்து சுமார் 600 மீட்டர் உயரம் வரை வெப்பநிலை உயர்ந்தும், அதற்கு மேல் வளிமண்டலத்தில் வெப்பநிலை குறைந்தும் நிலவுகிறது. இந்த வெப்பநிலை முரண் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் பனி மூட்டம் ஏற்படும்.

இதனால் சாலைகளில் காட்சியில் தெளிவின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. சூரிய உதயத்துக்கு பிறகு பனி விலகிவிடும். இது இந்த காலகட்டத்தில் ஏற்படும் வழக்கமான நிகழ்வுதான். இந்த பனிப்பொழிவு வரும் பொங்கல் திருநாள் வரை நீடிக்க வாய்ப்புள்ளது”.

இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x