Last Updated : 03 Jan, 2020 08:34 PM

 

Published : 03 Jan 2020 08:34 PM
Last Updated : 03 Jan 2020 08:34 PM

நரிக்குடி, வத்திராயிருப்பு ஒன்றியங்களை தக்கவைக்க திமுக, அதிமுக போட்டி

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி மற்றும் வத்திராயிருப்பு ஒன்றியங்களை தக்கவைத்துக்கொள்ள திமுகவும் அதிமுகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஆகிய 11 ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 20, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 200, ஊராட்சிமன்றத் தலைவர்கள் 450 மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் 3,372 என மொத்தம் 4,042 பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.

இதில், கிராம ஊராட்சித் தலைவர்கள் 23 பேரும், வார்டு உறுப்பினர்கள் 1,028 பேரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.

சறுக்கிய அருப்புக்கோட்டை; வாகை சூடிய வெம்பக்கோட்டை..

அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளில் அதிமுக ஒரு வார்டில் மட்டுமே வெற்றிபெற்றது. திமுக 10 வார்டுகளிலும் மற்றவை 4 வார்டுகளிலும் வெற்றிபெற்றன.

விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளில் அதிமுக 14 வார்டுகளிலும், திமுக 9வார்டுகளிலும் மற்றவை 2 வார்டுகளிலும் வெற்றிபெற்றன.

காரியாபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 12 வார்டுகளில் அதிமுக 4 வார்டுகளிலும், திமுக 8 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளில் அதிமுக 5 வார்டுகளிலும் திமுக 9 வார்டுகளிலும், தேமுதிக ஒரு வார்டிலும் வெற்றிபெற்றன.

நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 14 வார்டுகளில் அதிமுக 5 வார்டுகளிலும், திமுக 6 வார்டுகளிலும் மற்றவை 3 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

ராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 24 வார்டுகளில் அதிமுக 9 வார்டுகளிலும், திமுக 15 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளில் அதிமுக 3 வார்டுகளிலும் திமுக 9 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு உட்பட்ட 13 வார்டுகளில் அதிமுக 6 வார்டுகளலும் திமுக 4 வார்டுகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 வார்டுகளிலும் மற்றவை 1 வார்டிலும் வெற்றிபெற்றுள்ளன.

சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட 31 வார்டுகளில் அதிமுக 9 வார்டுகளிலும் திமுக 17வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், மற்றவை 4 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 16 வார்டுகளிலும் அதிமுக 5 வார்டுகளிலும், திமுக 8 வார்டுகளிலும், பாஜக ஒரு வார்டிலும் மற்றவை 2 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 வார்டுகளிலும் அதிமுகவே முழு வெற்றிபெற்றுள்ளது.

அமைச்சருக்கு பின்னடைவு

இதில், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியங்களையும், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் சொந்த தொகுதியில் உள்ள சிவகாசி ஒன்றியத்தையும் திமுக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இழுபறியில் நரிக்குடி..

அத்தோடு, மீதம் உள்ள 5 தொகுதிகளில் நரிக்குடி ஒன்றியத்தில் அதிமுக 5 வார்டுகளிலும், திமுக 6 வார்டுகளையும் மற்றவை 3 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளதால் அந்த 3 சுயேட்சை வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுத்து நரிக்குடி ஒன்றியத்தை தக்கவைத்துக்கொள்ளவும், வத்திராயிருப்பு ஒன்றியத்தில் தலா 6 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ள திமுகவும், அதிமுகவும் மீதம் உள்ள சுயேட்சை வேட்பாளரை தங்கள் பக்கம் இழுக்க திமுகவும், அதிமுகவும் களம் இறங்கியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x