Published : 03 Jan 2020 01:15 PM
Last Updated : 03 Jan 2020 01:15 PM

தெருநாய்களைப் பராமரிக்கும் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள்: விவரங்களைப் பதிவு செய்ய சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களுக்கு உணவு அளித்துவரும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்கள் விவரங்களை மின்னஞ்சல் மூலம் பதிவு செய்யுமாறு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்த சென்னை மாநகராட்சியின் செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் கால்நடை மருத்துவப் பிரிவில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் மற்றும் தெருநாய்களுக்கு (Community Dogs) குடியிருப்புப் பகுதிகளிலும், பொது இடங்களிலும் உணவு அளித்து வரும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் குறித்துப் பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் இடையே இதுகுறித்து எழும் முரண்பாடுகளைக் குறைப்பதற்காகவும், மேலும் இத்தகைய நாய்களின் (Community dogs) வாழ்வியல் நிலையை மேம்படுத்தவும், மேற்கண்ட தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பை நாட இந்திய விலங்குகள் நல வாரியத்தின் வழிகாட்டுதலின்படி பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மேலும், தோல் நோயினால் பாதிக்கப்பட்ட நலிவுற்ற தெருநாய்களையும், இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படாத நாய்களையும் அடையாளம் காண்பதற்கும், தெருநாய்களைத் தத்தெடுக்கும் இயக்கத்தை ஊக்குவிப்பதற்கும், மேற்கண்ட தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் சேவை பயன்படுத்திக் கொள்ளப்படும்.

ஆகவே, இந்திய விலங்குகள் நல வாரியத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தில், தெருநாய்களுக்கு உணவு அளித்து வரும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பங்குபெறுவதற்கு ஏதுவாக அவர்கள் தங்களது பெயர் மற்றும் விவரங்களை vetsec59@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் வரும் 15 -ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும், “வெறிநாய்க்கடி நோய் இல்லா மாநகரம்” என்ற இலக்கினை பெருநகர சென்னை மாநகராட்சி அடைய தீர்மானிக்கப்பட்டு, பொது சுகாதாரத்துறை, கால்நடை மருத்துவப் பிரிவின் சார்பாக மாபெரும் அளவிலான வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் திட்டம் மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் திட்டம் மண்டல வாரியாக செயல்படுத்தத் திட்டமிடப்பட்டது. மண்டலங்களில் மண்டல அலுவலர், மண்டல நல அலுவலர் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் ஆகியோரின் மேற்பார்வையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலத்தில் 8,846 நாய்கள், ஆலந்தூர் மண்டலத்தில் 3,474 நாய்கள், அம்பத்தூர் மண்டலத்தில் 8,243 நாய்கள், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 4,461 நாய்கள், வளசரவாக்கம் மண்டலத்தில் 5,869 நாய்கள், அண்ணாநகர் மண்டலத்தில் 3,346 நாய்கள், அடையாறு மண்டலத்தில் 4,186 நாய்கள், மணலி மண்டலத்தில் 3,551 நாய்கள், பெருங்குடி மண்டலத்தில் 4,598 நாய்கள், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 3,835 நாய்கள், ராயபுரம் மண்டலத்தில் 2,759 நாய்கள், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 5,392 நாய்கள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 3,706 நாய்கள் என மொத்தம் 62,266 நாய்களுக்கு வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் ஊசி போடப்பட்டுள்ளது.

இத்திட்டம் செயல்படுத்தும்பொழுது பொதுமக்கள் தாமாக முன்வந்து தாங்கள் வளர்க்கும் 3,221 செல்லப்பிராணிகளுக்கும் தடுப்பூசியினை போட்டுக்கொண்டு பயனடைந்துள்ளனர். மேலும், இத்திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது, பொதுமக்களிடம் வெறிநாய்க்கடி நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என ஆணையாளர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x