

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் தம்பி மனைவி செல்வி வெற்றி பெற்றுள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறைஊராட்சி ஒன்றியம் சன்னாசிநல்லூர் 1-வது வார்டு ஒன்றியக் குழுஉறுப்பினர் பதவி திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் தம்பி செங்குட்டுவன் மனைவி செ.செல்வி(44), குலையுடன் கூடிய தென்னை மரம் சின்னத்தில் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கை செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை தொடங்கியது. சன்னாசிநல்லூர், அயன்தத்தனூர் கிராம ஊராட்சிகளைக் கொண்ட இந்த ஒன்றியக் குழு வார்டில் 2,446 வாக்குகள் பெற்று செல்வி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பெ.செல்வி 1,084 வாக்குகளைப் பெற்றார். அதிமுக வேட்பாளரை விட 1,362 வாக்குகளை விசிக வேட்பாளர் செ.செல்வி அதிகம் பெற்றுள்ளார்.