Published : 02 Jan 2020 08:06 PM
Last Updated : 02 Jan 2020 08:06 PM

தந்தை, தாய் அடுத்தடுத்த மரணங்கள்: மின்சாரம் தாக்கி மகனும் பலியான சோகம்

தந்தை சில ஆண்டுகளுக்கு முன் மறைய, அடுத்த 2 மாதத்தில் தாய் விபத்தில் உயிரிழக்க அந்த சோகத்திலிருந்து மீள்வதற்குள் மகனும் மின்சாரம் தாக்கி பலியானார். மழை பெய்தபோது சாலையோரம் நடந்துச் சென்ற இளைஞர் மின்கம்பத்தை தொட்டதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கிழக்கு தாம்பரம், ரயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் கௌதம சந்திரசேகரன் ரயில்வே ஊழியர். இவரது மனைவி செல்வி ரேணுகாதேவி. இவர்களுக்கு விக்னேஸ்வரன் மற்றும் செந்தில் (26) என்கிற 2 மகன்கள் உள்ளனர்.

தந்தை கௌதம சந்திரசேகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்த போது உயிரிழந்தார். அதற்கு அடுத்த 2 மாதத்தில் தாய் செல்வி ரேணுகாதேவி ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இந்நிலையில் மூத்த மகன் விக்னேஸ்வரன் அவரது மனைவி குழந்தைகளுடன் ரயில்வே குடியிருப்பில் வசித்து வந்தார். அவர்களுடன் செந்தில் வசித்து வந்தார். செந்தில் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு 1:30 மணி அளவில் செந்தில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பினார். வீட்டுக்குச் செல்வதற்காக வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் சேலையூர் காவல் நிலையம் எதிரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நல்ல மழை பெய்துள்ளது.

மழை காரணமாக சாலை முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சாலையில் நடந்து சென்றபோது சாலையில் தேங்கிய மழைநீரை தாண்டி சாலையோரம் இருந்த மண் மேட்டின் மீது ஏற நினைத்தார். இதற்காக தண்ணீரிலிருந்து மண் மேட்டை நோக்கி தாண்டி குதித்துள்ளார். அப்போது பேலன்ஸ் தவறவே கீழே விழாமல் இருப்பதற்காக அருகில் இருந்த மின் கம்பத்தை பற்றி பிடித்துள்ளார்.

மின் கம்பத்தில் ஏற்கெனவே மின் கசிவு இருந்துள்ளது. மழை காரணமாக அது மேலும் பரவியிருந்துள்ளது. மின் கம்பத்தை செந்தில் பிடித்த அடுத்த நொடி அவர்மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைப்பார்த்த அருகிலிருந்த பொதுமக்கள் சேலையூர் போலீஸாருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் செந்தில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்து மரணங்கள் விக்னேஷ்வரனை தனிமரமாக்கிவிட்டது சோகமான நிகழ்வு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x