Last Updated : 02 Jan, 2020 03:06 PM

 

Published : 02 Jan 2020 03:06 PM
Last Updated : 02 Jan 2020 03:06 PM

விருத்தாசலம் வாக்கு எண்ணும் மையத்தில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்ட அவலம்

விருத்தாசலம் வாக்கு எண்ணும் மையத்தில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள அவலம் நடைபெற்றுள்ளது.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 315 மையங்களில் இன்று (ஜன.2) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள அவலம் விருத்தாசலம் ஒன்றியத்தில் நடைபெற்றுள்ளது.

விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் அரசுத் தரப்பு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் உதவிக்காக சில சிறுவர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளது தெரியவந்துள்ளது.

விருத்தாசலம் செல்வராஜ் நகரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவரும் இதில் அடக்கம். அவர், எண்ணி முடித்த வாக்குப் பெட்டிகளை அடுக்கிக் கொண்டு இருந்தபோது அவரிடம் இதுகுறித்து விசாரித்தோம்.

''சுப்பிரமணியன் என்ற ஒப்பந்ததாரர் என்னைப் பணிக்கு அழைத்து வந்தார். 400 ரூபாய் ஊதியம் தருவதாகக் கூறினார். அதை ஏற்று நான் காலையில் இருந்து இங்கு வேலை செய்து வருகிறேன். விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டுதான் பத்தாம் வகுப்பு முடித்தேன்'' என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x