Published : 02 Jan 2020 01:26 PM
Last Updated : 02 Jan 2020 01:26 PM

‘தர்பாருக்கு’ தடை கோரும் வழக்கு: லைகாவுக்கு உயர் நீதிமன்றம் அவகாசம் 

நடிகர் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாகவுள்ள 'தர்பார்' படத்திற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் லைகா நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள 'தர்பார்' திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்திற்குத் தடை விதிக்கக் கோரி மலேசியாவைச் சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ''நடிகர் ரஜினிகாந்த நடித்த '2.0' படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்திடம் இருந்து, மலேசிய விநியோக உரிமையை 20 கோடி ரூபாய்க்கு பெற்றதாகத் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் படத் தயாரிப்புக்கு 12 கோடி ரூபாயை ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்கு கடனாக லைகா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அந்தத் தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்தொகையை லைகா நிறுவனம் எங்களுக்கு வழங்க வேண்டி இருப்பதால், அந்தத் தொகையை வழங்காமல் 'தர்பார்' படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்'' எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த விடுமுறை கால நீதிமன்றம், ஜனவரி 2-ம் தேதிக்குள் பதிலளிக்க லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நாளை பதில் மனுத்தாக்கல் செய்வதாகக் கூறி லைகா நிறுவனம் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை நாளைக்குத் தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x