

ராஜீவ் கொலை வழக்கு ரவிச்சந்திரனுக்கு எத்தனை நாள் பரோல் விடுப்பு வழங்க முடியும் என்பது குறித்து விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தற்போது எனக்கு 62 வயதாகிவிட்ட நிலையில் அடிக்கடி நோய்வாய்படுகிறேன். இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எனது மகன் ரவிச்சந்திரன் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளான் இதேபோல் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட்பயாஸ் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதற்க்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளார்.
இதனால் ஆளுநர் ஒப்புதல் பெற தொடர்ந்து காலதாமதமாகி வருகிறது. எனவே ரவிசந்திரனுக்கு வழக்கு முடியும் வரையில் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்....
இந்த வழக்கு இன்று (ஜனவரி 2) நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்குவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.
அப்போது நீதிபதிகள் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு எத்தனை நாள் சிறை விடுப்பு வழங்க முடியும் என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை வரும் திங்கள் கிழமைக்கு (ஜனவரி 06-01-2020 ) ஒத்திவைத்தனர்.