சிதம்பரத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை: வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

அருள்பிரகாசம்
அருள்பிரகாசம்
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ளாட்சித் தேர்தலின் கீரப்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஒன்றியத்திற்கு உட்பட்ட சி. சாத்தமங்கலம் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அருள்பிரகாசம் (38) என்பவருக்கு கை உருளை சின்னத்தில் போட்டியிட்டார்.

இதேபோல் ஊராட்சித் தலைவருக்கு 5 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை என்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என வாக்கு எண்ண முடியாது என்று அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வேட்பாளர் அருள்பிரகாசம் கூறுகையில், "நான் கடந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டேன். தொடர்ந்து 6 முறைக்கு மேல் தேர்தலில் வாக்கு அளித்துள்ளேன். ஆனால் தற்போது நடைபெற்ற தேர்தலிலும் நான் வாக்களித்துள்ளேன். மேலும் என் மனுவை ஏற்றுக்கொண்டு கை உருளை சின்னம் வழங்கினர். தற்போது எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்துள்ளனர். இது திட்டமிட்ட சதியாக உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று கூறினார்.

இதுகுறித்து கீரப்பாளையம் ஒன்றியத் தேர்தல் அலுவலர் பாலகிருஷ்ணன் கூறுகையில், "மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வந்த கடிதத்தின் அடிப்படையில் தற்போது தற்காலிகமாக மதியம் 3 மணி வரை சம்பந்தப்பட்ட சி.சாத்தமங்கலம் ஊராட்சி தலைவருக்கான வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்துள்ளோம்" என்று கூறினார்.

இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெளியே காத்திருக்கும் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பதற்றத்துடன் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in