

உள்ளாட்சித் தேர்தல் பணியில் காத்திருப்பவர்களாக இருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் சா.அருணன் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிச.27, 30 ஆகிய தேதிகளில் நடந்தது. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுப்பட்டனர்.
வாக்கு மையத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்களை தவிர்த்து மீதமுள்ளவர்களை, அவசர பணிக்காக காத்திருப்பவர்களாக வைத்திருப்பது வழக்கம். அதன்படி, தற்போது 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்போராக வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து 2 நாட்களாக காத்திருப்பில் வைக்கப்பட்டவர்களுக்கு ஊதியம் இல்லை என்பது நியாயமில்லை.
எனவே, தமிழக தேர்தல் ஆணையர் அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு தேர்தல் பணியில் காத்திருப்போராக இருந்த ஊழியர்களுக்கு உடனே ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், வாக்கு எண்ணிக்கை பணியில் காத்திருப்போராக இருப்பவர்களுக்கும் சிரமம் இன்றி ஊதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.