Last Updated : 31 Dec, 2019 01:46 PM

 

Published : 31 Dec 2019 01:46 PM
Last Updated : 31 Dec 2019 01:46 PM

சிவகங்கையில் வாக்குப்பெட்டி சீல் உடைக்கப்பட்டதாக பரவிய தகவல்: வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்ட வேட்பாளர்கள்- போலீஸ் குவிப்பு

சிவகங்கையில் வாக்குப் பெட்டியின் சீல் உடைக்கப்பட்டு இருப்பதாக பரவிய தகவலையடுத்து வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் கல்லல், தேவகோட்டை, சாக்கோட்டை, கண்ணங்குடி, திருப்பத்தூர், சிங்கம்புனரி, எஸ்.புதூர் ஆகிய ஏழு ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று (டிச.30) நடைபெற்று.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் அந்தந்த ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சாக்கோட்டை ஒன்றியத்தில் ஒரு மாவட்ட உறுப்பினர் பதவி , 11 ஒன்றிய உறுப்பினர் பதவி, 23 ஊராட்சி தலைவர் பதவி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் நேற்று இரண்டாம் கட்டமாக தேர்தல் நடந்தது.

இதில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் வாக்கு எண்ணிக்கை மையமான காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டது.இதில் பத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பெட்டிகள் சீல் உடைக்கப்பட்டு இருப்பதாக கூறி வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வாக்கு பெட்டி வைக்கும் அறை சீல் வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர் வருகைக்குப் பிறகு அறை சீல் வைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்கு எண்ணிக்கை மைய வாயிலில் ஏராளமானோர் குவிந்தால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது .

முன்னதாக நேற்று கல்லல் ஒன்றியம் 6-வது வார்டில் அதிமுக - அமமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 8 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இன்று சாக்கோட்டை ஒன்றியத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x