Published : 30 Dec 2019 04:47 PM
Last Updated : 30 Dec 2019 04:47 PM

திண்டுக்கல்லில் களைகட்டிய 2-ம் கட்ட தேர்தல்: வாக்காளர்களுக்கு குஸ்கா, சுண்டல், மோர், டீ, சமோசா விநியோகம்

படங்கள்: பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தேர்தலில் பல கிராமங்களில் வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில் குஸ்கா, சுண்டல் பொட்டலம், மோர், டீ, சமோசா என வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாம்கட்டமாக ஒட்டன்சத்திரம், பழநி, கொடைக்கானல், தொப்பம்பட்டி, வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை என ஏழு ஒன்றியங்களுக்குட்பட்ட 1341 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இதில் 4022 பேர் போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் நீண்டவரிசையில் நின்று ஆர்வமுடன் விறுவிறுப்பாக வாக்களித்தனர்.

தண்ணீர் விநியோகத்தை நிறுத்தி வாக்களிக்க அனுப்பிய போலீஸார்..

வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டனம்பட்டி கிராமத்தில் காலையில் குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் வாக்களிக்க ஆர்வம்காட்டாமல் வீடுகளில் கிராமமக்கள் தண்ணீர் பிடிப்பதில் பெண்கள் ஆர்வம்காட்டினர். இதனால் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக இருந்தது.

வாக்களிக்க பலரும் வராது குறித்து அறிய பாதுகாப்பு பணியில் இருந்தபோலீஸார் ஊரை வலம் வந்தனர். மக்களிடம் கேட்டபோது, தண்ணீர் வந்துவிட்டது அதனால் பிடித்து வைத்துவிட்டு வாக்களிக்க வரலாம் என இருக்கிறோம் என பெண்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து ஊராட்சி செயலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தண்ணீர் வினியோகத்தை நிறுத்தவும், மாலையில் திறந்துவிடவும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து காலையில் மக்கள் அதிகளவில் வந்து வாக்களித்தனர்.

குஸ்கா, தக்காளி சாதம் உணவு, சுண்டல், மோர்..

வேடசந்தூர் ஒன்றியம் எருதனம்பட்டி கிராமத்தில் கிராம ஊராட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில் குஸ்கா, தக்காளி சாதம் உணவு, சுண்டல், மோர் ஆகியவை வாக்களித்துவிட்டு வந்த வாக்களர்களுக்கு வழங்கப்பட்டது.

வாக்குச்சாவடிக்கு சிறிது தூரத்திலேயே பந்தல் அமைத்தும், மரத்தடியிலும் உணவு வினியோகம் நடந்தது. போட்டியிடுபவர்கள் அனைவரும் தனித்தனியாக ஏற்பாடுகள் செய்திருந்ததால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்படாமலும், புகார் தெரிவிக்காமலும் அமைதிகாத்தனர்.

உசிலம்பட்டி ஊராட்சியில் வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் செல்லும் சாலையில் புதிதாக ஒரு திறந்தவெளி டீக்கடையையே உருவாக்கியிருந்தனர். இங்கு வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களுக்கு அடுப்பு வைத்து உடனுக்குடன் டீ போட்டுத்தரப்பட்டது. டீயுடன் சமோசாவும் இலவசமாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது.

சித்தூர் ஊராட்சிக்குட்பட்ட மொங்குபெத்தன்பட்டி கிராமத்தில் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களுக்கு தக்காளிசாதம் வழங்கப்பட்டது.
இந்த கிராமத்தில் ஆரம்பபள்ளியில் இருந்த வாக்குச்சாவடியில் அலுவலர்கள் பணி தொய்வு காரணமாக பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்கவேண்டியநிலை ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு சென்ற திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை திட்ட இயக்குனர் கவிதா விரைந்து செயல்படும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

காலை 9 மணி வரை 8.97 சதவீத வாக்குகள் பதிவாகின. 11 மணி வரை 23.84 சதவீதமும், பகல் 1 மணி வரை 47.97 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. மாலை 3 மணிக்கு 62.37% வாக்குப்பதிவு ஆகியிருந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்ட தேர்தலை விட இரண்டாம் கட்ட தேர்தல் கிராமப்புறங்களில் களைகட்டி விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x