Published : 24 Aug 2015 08:33 AM
Last Updated : 24 Aug 2015 08:33 AM

லாரி மோதியதில் மூளைச்சாவு: ஆந்திர மாநில இளைஞரின் இதயம் ஏமன் முதியவருக்கு பொருத்தப்பட்டது - சென்னை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை

மூளைச்சாவு அடைந்த ஆந்திர மாநில இளைஞரின் இதயம் விமானத்தில் கொண்டு வரப்பட்டு சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏமன் நாட்டு முதியவருக்கு பொருத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர்(22). இன்ஜினீயரிங் படித்துள்ள இவர், 2 நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து செல்லும்போது லாரி மோதி பலத்த காயமடைந்தார்.

அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் ஸ்ரீதர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து ஸ்ரீதரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

அதன்படி, அறுவைச் சிகிச்சை செய்து ஸ்ரீதரின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் கண்களை எடுத்தனர். ஆந்திர மாநிலத்தில் மாற்று உறுப்புகளுக்காக சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் பொருத்தப்பட்டன.

சென்னை அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை டாக்டர்கள் தங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக இதயம் மற்றும் நுரையீரலை வாங்குவதற்கு சென்றிருந்தனர்.நுரையீரல் பாதிப்படைந்து இருந்ததால், இதயத்தை மட்டும் பெற்றுக்கொண்டு சிறப்பு விமானம் மூலம் நேற்று மாலை 6 மணிக்கு சென்னை திரும்பினர்.

விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸில் இதயத்துடன் புறப்பட்டு 6.09 மணிக்கு (9 நிமிடம்) மருத்துவமனைக்கு சென்றனர். மருத்துவமனையில் இருந்த ஏமன் நாட்டைச் சேர்ந்த 60 வயது முதியவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் இதயத்தை பொருத்தினர். இதயத்துடன் ஆம்புலன்ஸ் விரைவாக செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை போலீஸார் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x