Published : 30 Dec 2019 02:34 PM
Last Updated : 30 Dec 2019 02:34 PM

வீட்டுமனைப் பட்டா வழங்காததால் பவானிசாகர் அருகே தேர்தல் புறக்கணிப்பு: கருப்புக் கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்

கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்ததால், வெறிச்சோடி காட்சியளிக்கும் வாக்குச்சாவடி.

சத்தியமங்கலம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தேர்தலைப் புறக்கணித்து கருப்புக் கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புங்கார் ஊராட்சி 1-வது வார்டு முத்துராஜா நகர் பகுதியில் வீட்டுமனைப் பட்டா கேட்டு தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இக்கிராமத்தில் உள்ள 1-வது வார்டில் மொத்தம் 228 வாக்குகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடத்தில் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகாலமாக வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரியும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், கிராம ஊராட்சி 1-வது வார்டில் வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், இதுவரையிலும் யாரும் வாக்களிக்க வராததால் வாக்குச்சாவடி வெறிச்சோடியது.

முத்துராஜா நகர் கிராமம் முழுவதும் கருப்புக் கொடி கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்துத் தகவல் அறிந்த பவானிசாகர் தேர்தல் நடத்தும் அலுவலர் மைதிலி மற்றும் போலீஸார் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு வந்தனர்.

இந்நிலையில் இந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட நந்திபுரம் வன கிராமத்தில் 27 வாக்குகள் உள்ளதால், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆறு வாக்காளர்கள் காலை 8 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இருப்பினும் 200 வாக்குகள் உள்ள முத்துராஜா நகர் கிராம மக்கள் முழுவதுமாக தேர்தலைப் புறக்கணித்ததால், கிராமத்தில் 10 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகும் வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x