Published : 30 Dec 2019 07:37 AM
Last Updated : 30 Dec 2019 07:37 AM

சென்னை ரிசர்வ் வங்கி கிளைக்கு தஞ்சாவூர், கும்பகோணம் வங்கிகளிலிருந்து அனுப்பப்பட்ட பணத்தில் கள்ளநோட்டுகள்

தஞ்சாவூர், கும்பகோணம் வங்கிகளில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட பணத்தில் 37 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள 2 தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகளில் இருந்தும், தஞ்சாவூரில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் இருந்தும் வாடிக்கையாளர்களால் செலுத்தப்பட்ட பணம், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்கு அனுப்பப்பட்டது.

அப்போது, அங்குள்ள அதிகாரிகள் இந்தப் பணத்தை வழக்கமான முறையில் ஆய்வு செய்தபோது, ரூ.500 நோட்டுகளில் 37 கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் டி.எம்.சேனாதிபதி, தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து, வங்கிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதன்மூலம் வங்கிகளில் அதிகளவில் பணம் செலுத்தியது யார்? அதிக முறை வந்து சென்ற வாடிக்கையாளர்கள் யார்? சந் தேகத்துக்கிடமான வகையில் யாராவது வந்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x