Published : 29 Dec 2019 11:11 AM
Last Updated : 29 Dec 2019 11:11 AM

‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’- வீடுகளில் அறிவிப்பு பலகை வைத்த கிராம மக்கள்

சிங்கம்புணரி

‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்று சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டி கிராம மக்கள் தங்களது வீடுகளில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் தரப்பில் பணம் தருவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உங்கள் வாக்கு, உங்களின் உரிமை, அதை விற்காதீர்கள் என்று வாக்காளர்களிடையே தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனாலும், வாக்குகளுக்கு பணம் தரும் போக்கு குறைந்தபாடில்லை.

இந்நிலையில், வாக்காளர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக "எங்கள் வாக்குகள் விற்பனைக்கு அல்ல" என்ற அறிவிப்பு பலகையை தங்களது வீடுகளில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மருதிப்பட்டி கிராம மக்கள் வைத்துள்ளனர்.

மொத்தமுள்ள 180 வீடுகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மக்களின் இந்த முடிவு அனைவரிடையேயும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த நாகூர்மீரான் கூறியதாவது: வாக்குக்கு பணம் வாங்கினால், வெற்றி பெறும் பிரதிநிதிகளிடம் அடிப்படை வசதிகளுக்காக கோரிக்கை வைக்க முடியாது. இதனால் வாக்குகளுக்கு பணம் வாங்கக் கூடாது என முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வேட்பாளர்கள் பணம் கொடுப்பதைத் தடுக்கவும் ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என வீடுகளில் அறிவிப்பு பலகை வைத்துள்ளோம் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x