Published : 29 Dec 2019 08:02 AM
Last Updated : 29 Dec 2019 08:02 AM

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா ரத்து

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா திடீரென நேற்று ரத்து செய்யப்பட்டது.

சென்னை புறநகர், காட்டாங் கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக சிறப்பு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தரும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிஎம்.பி.யுமான டி.ஆர்.பாரிவேந்தர்தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் மங்களகிரி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத் தலைவர் டி.எஸ்.ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேர்வில்சிறப்பிடம் பெற்ற 251 மாணவ,மாணவியருக்கு பதக்கங்கள் வழங்கினார். அவர்கள் உட்பட 5,884 மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இதில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் முன்னாள் தலைவர் மற்றும் ஐஐடி கரக்பூர்முன்னாள் இயக்குநர் டி.ஆச்சார்யா, எஸ்ஆர்எம் கல்வி நிறுவனசேர்மன் ரவி பச்சமுத்து, தலைவர்பி.சத்தியநாராயணன், துணைத் தலைவர் ஆர்.சிவகுமார், துணைவேந்தர் சந்தீப் சன்சேத்தி, பதிவாளர் என்.சேதுராமன், தேர்வுகட்டுப்பாட்டாளர் எஸ்.பொன்னுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் சென்னை மற்றும் டெல்லி என்சிஆர் வளாகங்களில் பயின்ற மாணவ - மாணவியர் 3,901 பேருக்கு இளங்கலை பட்டமும், 1,576 பேருக்கு முதுகலை பட்டமும், 69 பேருக்கு ஆராய்ச்சிக்கான பிஎச்டி பட்டமும், 338 பேருக்கு டிப்ளமோ பட்டயமும் வழங்கப்பட்டன.

இந்து அமைப்புகள் அறிவிப்பு

இதற்கிடையே, வைரமுத்து எழுதிய ஆண்டாள் குறித்த ஆய்வுக் கட்டுரைக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தின. ‘மீ டூ’ இயக்கம் மூலம் பாடகி சின்மயி, வைரமுத்து மீது பல குற்றச்சாட்டுகள் தெரிவித்தார்.

மேலும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றால் ராஜ்நாத் சிங் மற்றும் வைரமுத்துவுக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் ஆகிய இந்து அமைப்புகள் அறிவித்திருந்தன.

ராஜ்நாத்சிங் பங்கேற்கவில்லை

இந்நிலையில் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பட்டமளிப்பு விழாவுக்கு வருவதை தவிர்த்திருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் கவிஞர் வைரமுத்துவும், பிரச்சினைக்குரிய இந்த விழா வில் பங்கேற்பதை தவிர்த்து விட்டதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்துவைரமுத்துவுக்கு வழங்கப்படவிருந்த கவுர டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை கல்லூரி நிர்வாகத்தினர் திடீரென ரத்து செய்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தமிழக பாஜகவினரும், இந்து அமைப்புகளும் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம்வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விழாவில் பங்கேற்பதை ரத்து செய்துள்ளார். இதனால்வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம்வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அறிக்கையில் கூறி யுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x