Published : 29 Dec 2019 07:29 AM
Last Updated : 29 Dec 2019 07:29 AM

158 ஊராட்சி ஒன்றியங்களில் பிரச்சாரம் ஓய்ந்தது; நாளை 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: பாதுகாப்பு பணியில் 61 ஆயிரம் போலீஸார்

சென்னை

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 91,975 பதவிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வேட்புமனு தாக்கல்செய்தனர். இறுதி வேட்பாளர் பட்டியலில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் இடம்பெற்றனர். 18,570 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த20-ம் தேதி பிரச்சாரம் தொடங்கியது.

156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27-ம் தேதிநடந்தது. அசம்பாவிதமின்றி, அமைதியாக தேர்தல் நடந்தது. இதில் 76.19% வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், 2-ம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் 38,916கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்பதவிகள், 4,924 ஊராட்சிமன்றத் தலைவர் பதவிகள், 2,544 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகள், 255 மாவட்ட ஊராட்சி வார்டுஉறுப்பினர் பதவிகள் என மொத்தம் 46,639 பதவிகள் உள்ளன. இதில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது போக, இதர பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தீவிரமாக நடந்துவந்த பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் அல்லாத, வெளியில் இருந்துவந்த கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் அனைவரும், அந்தந்த உள்ளாட்சி பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

தேர்தல் நடைபெறும் பகுதியில் இருந்து 5 கி.மீ. சுற்றளவு வரை உள்ள மதுக்கடைகளை நேற்று மாலை 5 மணி முதல், நாளை மாலை வாக்குப்பதிவு முடியும் வரை மூடுமாறு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இத்தேர்தலில் மொத்தம்1 கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 25,008 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு தேவையான படிவங்கள், ஆவணங்கள், வாக்குச்சீட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பாக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடக்கிறது. வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் நாளை பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் பாதுகாப்பு பணியில் போலீஸார், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர்என மொத்தம் 61,004 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ள 1,551 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு, இணையதளம் வழியாகமாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள்,மாநில தேர்தல் ஆணையர் அலுவலகங்களில் இருந்தவாறு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை வீடியோ பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

27 மாவட்டங்களில் 315 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்டவாக்குப்பதிவுக்கு பிறகு, வாக்குப்பெட்டிகள் இங்கு கொண்டு செல்லப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. நாளை 2-ம் கட்ட தேர்தல் முடிந்த பிறகு, அந்த வாக்குப்பெட்டிகளும் இங்கு பாதுகாப்பாக வைக்கப்படும்.2 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் ஜனவரி 2-ம் தேதி எண்ணப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x