Published : 28 Dec 2019 08:32 PM
Last Updated : 28 Dec 2019 08:32 PM

தனியார் ஓட்டல்களுக்கு நிகராக புதுப்பொலிவு பெறும் ‘ஓட்டல் தமிழ்நாடு’: மதுரையில் ஆண்டுக்கு ரூ.7 ½ கோடி வருவாய் இலக்கு

தமிழ்நாடு வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான தமிழ்நாடு ஓட்டல்கள் சுற்றலாப்பயணிகள் தங்குவதற்கு மட்டுமில்லாது தற்போது வர்த்தக கருத்தரங்கு, வீட்டு சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு புதுப்பொலிவுப் படுத்தப்படுகின்றன.

வணிக அடிப்படையில் சுற்றுலாவை மேம்படுத்த 1971-ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தொடங்கப்பட்டது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்களில் இந்த சுற்றுலா வளர்ச்சி கழகம், ‘ஓட்டல் தமிழ்நாடு’ என்ற ஓட்டல்களையும், படகு இல்லங்களையும் அமைத்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 23 இடங்களில் ‘ஓட்டல் தமிழ்நாடு’ ஓட்டல்களும், கொடைக்கானல், ஊட்டி, முட்டுக்காடு, முதலியார் குப்பம், ஏற்காடு, குற்றாலம் ஆகிய இடங்களில் படகு இல்லங்களும் உள்ளன.

மதுரையில் அழகர் கோயில் சாலையிலும், பெரியார் பஸ்நிலையம் அருகேயும் 2 இடங்களில் ‘ஓட்டல் தமிழ்நாடு’ ஓட்டல்கள் செயல்படுகின்றன. இந்த ஓட்டல்கள், முன்பு டெண்டர் விடப்பட்டு தனியாரால் நடத்தப்பட்டன. கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், ஓட்டல்களை கையகப்படுத்தி நேரடியாக நடத்த ஆரம்பித்துள்ளன.

இந்த ஓட்டல்கள் நகரின் மையப்பகுதியில் அமைந்து இருந்தும் சுற்றுலாப் பயணிகளைத் தவிர மற்றவர்கள் யாரும் பெரியதாக இந்த ஹோட்டல்களுக்கு வருவதில்லை. தொழில் முனைவோர்கள், மருத்துவர்கள், தனியார் நிறுவன அதிகாரிகள், தனியார் ஓட்டல்களுக்கேச் செல்கின்றன. தனியார் ஓட்டல்களை விடக் குறைவான வாடகையில் சாப்பாடு வசதியுடன் கூடிய ஏசி மற்றும் ஏசி இல்லாத அறைகள், விசாலமான கார் பார்க்கிங், கருத்தரங்கு கூடம், குழந்தைகள் விளையாடுவதற்கான வசதிகள் உள்ளிட்டவை அமைந்தும் பொதுமக்களை இந்த ஓட்டல்கள் இன்னும் ஈர்க்க வில்லை. தற்போது சுற்றுலா வளர்ச்சிக் கழகம், இந்த ஓட்டல்களை தனியார் ஓட்டல்களுக்கு நிகராக புதுப்பொலிவுப்படுத்தி உள்ளனர்.

மதுரை அழகர் சாலையில் உள்ள ஓட்டலில் 50 ஏசி மற்றும் ஏசி இல்லாத அறைகளும், பெரியார் பஸ்நிலையம் அருகே உள்ள ஓட்டலில் 45 ஏசி மற்றும் ஏசி இல்லாத அறைகளும் உள்ளன. அழகர் கோயில் சாலையில் உள்ள ஓட்டலில் 150 பேர், 200 பேர் மற்றும் 400 பேர் வரை அமரக்கூடிய தனித்தனியாக அமைந்துள்ள ஹால்கள் உள்ளன.

தனியார் ஓட்டல்கள், மால்களில் நடக்கும் திருமணங்களுக்கு லட்சக்கணக்கில் கட்டணம் உள்ளது. ஆனால், அதை விட குறைவான வாடகையில் ‘ஓட்டல் தமிழ்நாடு’ ஓட்டலில் ஹால்கள், அறைகள் வாடகைக்குவிடப்படுகின்றன.

இங்குள்ள ஹாலில் வீட்டு சுப விஷேசங்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகளைக் கூட நடத்தலாம்.

அதுபோல், தனியார் நிறுவன கருத்தரங்குகள் நடத்தலாம். ஆனால், பெரியளவுக்கு ‘ஓட்டல் தமிழ்நாடு’ மக்களிடம் சென்றடையதாதால் இப்படியொரு வசதியான, பார்க்கிங் வசதியுள்ள ஓட்டல் நகரின் மையப்பகுதியில் இருப்பது மக்களுக்கு தெரியவில்லை.

அதனால், தற்போது இந்த ஓட்டல்களை மேம்படுத்தி, சுற்றுலாப்பயணிகள் மட்டுமில்லாது அனைத்து தரப்பு மக்களும் இந்த ஓட்டல்களைப் பயன்படுத்த சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சீனியர் மேலாளர் எம்.குணேசேகரன் கூறுகையில், ‘‘கடந்த காலத்தில் தனியார் இந்த ஓட்டல்களை நிர்வாகித்ததால் அதன் வளர்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அக்கறை காட்டவில்லை. மேலும், இந்த ஓட்டல்களை தனியார் நிர்வாகம் செய்வதாக தற்போது வரை மக்கள் நம்புகின்றனர்.

தற்போது அரசே நேரடியாக நிர்வகிப்பதால் ஏராளமான சலுகைகளுடன் தனியார் ஓட்டல்களுக்கு நிகரான வசதிகளுடன் புதுப்பொலிவுடன் ஓட்டல் தமிழ்நாடு நிர்வாகத்தை செயல்படுத்துகிறோம். இந்த ஆண்டு அழகர் கோயில் சாலையில் உள்ள ஓட்டலுக்கு ரூ. 4 கோடி வருவாய் இலக்கும், பெரியார் பஸ்நிலையம் அருகே உள்ள ஹோட்டல்களுக்கு ரூ.3 ½ கோடி இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப்பயணிகள் தவிர மற்றவர்களும் வர ஆரம்பித்தால் தனியார் ஹோட்டல்களுக்கு நிகராக ஓட்டல் தமிழ்நாடும் வளர்ச்சிப்பெறும் ’’ என்றார்.

‘ஓட்டல் தமிழ்நாடு’ சிறப்புச் சலுகைகள்..

மூத்த குடிமக்கள், விதவைகளுக்கு 20 சதவீதம் கட்டணத்தில் சலுகையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 25 சதவீதமும், 5 முதல் 10 அறைகள் மொத்தமாக புக்கிங் செய்பவர்களுக்கு 10 சதவீதமும், 10 முதல் 20 அறைகள் வரை புக்கிங் செய்பவர்களுக்கு 15 சதவீதமும், 15 முதல் 20 அறைகள் வரை புக்கிங் செய்பவர்களுக்கு 20 சதவீதமும், 20 முதல் 25 அறைகளுக்கு 25 சதவீதமும், ஒரே அறையில் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக தங்குவோருக்கு 10 சதவீதமும் சலுகையும் வழங்கப்படுகிறது.

திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு மொத்தமாக 50 ஏசி அறைகள் ஒதுக்கப்படுகிறது. பாதுகாப்பான செக்கியூரிட்டி மற்றம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அறைகளில் தங்குவோருக்கு இலவச காலை உணவு வழங்கப்படுகிறது. இலவச வைஃபை வசதி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x