Published : 28 Dec 2019 07:34 PM
Last Updated : 28 Dec 2019 07:34 PM

பாஜகவுக்கு அடிபணியும் போட்டியில் தமிழகம் முதலிடம்: மதுரையில் வைகோ விமர்சனம்

மத்தியில் ஆளும் பாஜகவிற்கு யார் அடிபணிவது என்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:

முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பிரமுகர் ஒருவர் பெண் வாக்காளர்களை அத்துமீறி அழைத்துச் சென்று, அவர்களின் வாக்குகளை வாக்குப்பெட்டியில் போடும் வீடியோ வெளிவந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதுபோல்தான் முறைகேடுகள் நடக்கும் என திமுக குற்றம்சாட்டியது. இதனால், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துவிடக்கூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்.

பண வெள்ளத்தை நம்பி ஆளும் கட்சி இருக்கிறது. ஆனால் அவர்கள் ஏமாந்து போவார்கள். மத்தியில் ஆளும் கட்சிக்கு யார் அடி பணிவது என்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

இவ்வாறு வைகோ கூறினார்.

முன்னதாக, இந்தியாவிலேயே சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு முதலிடம் வழங்கியது.

தேசிய நல்லாட்சி தினத்தை ஒட்டி, மத்திய நிா்வாக சீா்திருத்தம் மற்றும் பொது மக்களின் குறைதீா்க்கும் துறை சார்பில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யப்பட்டது.

அந்த ஆய்வுக்காக ஒவ்வொரு மாநிலத்திலும் பொது மக்களுக்கு நலத் திட்டங்களை அளிக்கக் கூடிய 17 அரசுத் துறைகளில் இருந்து பெறப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் புள்ளிகளை வழங்கப்பட்டது. தரவரிசைப் பட்டியலில் தமிழகத்துக்கு 5.62 புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தது. தமிழகம் முதலிடத்தைப் பிடித்தது.

இந்நிலையில், தமிழகம் பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து பின்தங்கியிருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அந்த வரிசையில், மத்தியில் ஆளும் பாஜகவிற்கு யார் அடிபணிவது என்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என வைகோ விமர்சித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x