Published : 28 Dec 2019 04:53 PM
Last Updated : 28 Dec 2019 04:53 PM

பறிபோகும்  அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டு இடங்கள் : கண்டுக்கொள்ளாத தமிழக அரசு: திமுக எம்பி வில்சன் ஆதங்கம்

மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய இட ஒதுகீட்டிற்கான மாநில அரசால் அளிக்கப்பட வேண்டிய இடங்கள் முறையாக ஒதுக்கப்படவில்லை , பறிபோகிறது அதை தமிழக அரசு தட்டிக்கேட்கவில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் குற்றம்சாட்டியுள்ளார்.

இளநிலை மருத்துவப் படிப்பிற்கு 15 விழுக்காடு இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு 50 விழுக்காடு இடங்களும் அகில இந்திய இடஒதுக்கீட்டிற்கென வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீப ஆண்டுகளாக இது ஒதுக்கப்படாமல் உள்ளது. தமிழக அரசும் அதுகுறித்து கேட்பதில்லை என கல்வியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், கூறியதாவது:

“தமிழ்நாட்டில் 7,150 இடங்களில் அகில இந்திய இடஒதுக்கீடு 15 விழுக்காட்டின்படி 1,073 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இதில் 50 விழுக்காடு இடங்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் எனில் 536 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால் அவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த இடங்கள் ஒதுக்கப்படவில்லை. இதேபோல் முதுநிலை மருத்துவப் படிப்பில் 537 இடங்கள், முதுநிலை பட்டயப்படிப்பில் 197 இடங்கள், பல் மருத்துவப் படிப்பில் 74 இடங்கள் ஆகிய இடங்கள் ஒதுக்கப்படாமல் இருந்துவருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்தாண்டு மருத்துவப் படிப்பிற்கான அறிவிப்புகளை தற்போது மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஆனால் அதில் இந்த இடஒதுக்கீடு தொடர்பாக எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.

அகில இந்திய கோட்டாவில் தமிழகத்தில் நிரப்பும்போது இட ஒதுக்கிட்டை கடைபிடிக்க மறுக்கிறார்கள் என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு. அமைச்சர் இதுகுறித்து எங்களுக்கு அளித்த பதிலில் ’இடஒதுக்கீடு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்பதால் மாநிலத்திலேயே தனியாகச் சட்டம் இயற்றி இட ஒதுக்கீட்டை பின்பற்றலாம்’ எனத் தெரிவித்திருந்தார். அப்படியானால் மாநில அரசு அதை ஏன் செய்ய மறுக்கிறது.

தமிழ்நாடு அரசை பொறுத்தவரை 1994-ம் ஆண்டு சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால், இந்தச் சட்டத்தின்படி மத்திய அரசுக்கு வழங்கப்படும் அகில இந்திய இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்கின்ற அடிப்படையிலேயே இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இது சமூகநீதிக்கு எதிரானது. எனவே இதனை உடனடியாக தடுக்க மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் முயற்சி எடுக்க வேண்டும். இதனால் இடம் கிடைக்காமல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகின்றனர்.

தொடர்ச்சியாகப்பார்த்தால் 2 அல்லது 3 ஆண்டுகளில் இது நடந்துள்ளது. இதை தமிழக அரசு தட்டிக்கேட்டிருக்க வேண்டும். தமிழக அரசின் சீட்டுக்களைத்தாம் அகில இந்திய கோட்டாவுக்காக கொடுக்கிறார்கள். இதை தமிழக அரசு தட்டிக்கேட்டிருக்க வேண்டும்.

அவர்கள் இதை அமைச்சரின் கவனத்திற்கே கொண்டுச் சென்றிருக்கலாம் ஆனால் அதை செய்யவில்லை. சமூக நீதிக்கு எதிரான இதை ஒரு மோசடி என்றே சொல்வேன்”.

இவ்வாறு வில்சன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x