Published : 28 Dec 2019 04:32 PM
Last Updated : 28 Dec 2019 04:32 PM

போராட்டங்கள் குறித்து கருத்து கூற ராணுவத் தளபதிக்கு உரிமை உண்டு:வானதி சீனிவாசன்

நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து கருத்து கூற ராணுவத் தளபதிக்கு உரிமை உண்டு என, பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவத் தளபதி பிபின் ராவத் அந்நிகழ்ச்சியில், "மக்களை வழிநடத்துபவரே தலைவர். நீங்கள் முன்னோக்கி நடந்தால் மக்களும் உங்களைப் பின்தொடர்வார்கள். ஆனால், அப்படி வழிநடத்தும் தலைவர்கள் சரியான பாதையில் செல்ல வேண்டும். மக்களைத் தவறாக வழிநடத்துபவர்கள் சிறந்த தலைவர்களாக இருக்கவே முடியாது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களைத் தவறாக வழிநடத்தியதால் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துகிறார்கள். இது நல்ல தலைமை அல்ல" என பேசியிருந்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் மாணவர்களின் போராட்டங்கள் குறித்து அவர் இப்படி பேசியிருந்தார்.

பிபின் ராவத் மரபுகளை மீறி அரசியல் பேசியிருப்பதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து இன்று (டிச.28) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், "ராணுவத் தளபதி தன் கருத்தை அரசியல் ரீதியாக பார்க்கக் கூடாது என தன் பேச்சிலேயே தெரிவித்துள்ளார். அரசின் கொள்கைகள், திட்டங்களுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் நடைபெறும் போராட்டங்களுக்கு அனுமதி உண்டு. பாஜகவும் அப்படி போராடி வளர்ந்த கட்சிதான்.

ஆனால், சில போராட்டங்களில் சமூக விரோத சக்திகள், வன்முறையை தூண்டுவது வீடியோ ஆதாரங்களுடன் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதைப்பற்றித்தான் ராணுவத் தளபதி கூறியிருக்கிறார். ராணுவத் தளபதி அரசியல் கருத்துகளை அரசியல் சார்பாகக் கூறக்கூடாதே தவிர, நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து கருத்து கூற அவருக்கு உரிமை உண்டு" என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x