Published : 28 Dec 2019 09:13 AM
Last Updated : 28 Dec 2019 09:13 AM

வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்ப்பு: எஸ்ஆர்எம் பட்டமளிப்பு விழாவுக்கு ராஜ்நாத் சிங் வருகை ரத்து

கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருவதை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திடீரென ரத்து செய்துவிட்டதாக தமிழக பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா இன்று(டிச.28) காலை 11 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கவிஞர் வைரமுத்துவுக்கு இலக்கியத்துக்கான கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி உரையாற்ற இருப்பதாக அழைப்பிதழ் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பட்டமளிப்பு விழாவுக்கு வருவதை ராஜ்நாத் சிங் திடீரென ரத்து செய்துள்ளதாக தமிழக பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழுக்கு தொண்டாற்றியவர் கள் பற்றி ‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். அந்த வரிசையில், ஆண்டாள் குறித்த ஆய்வுக் கட்டுரையில் அவர் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்து அமைப்புகள் எதிர்ப்பு

இதை சுட்டிக்காட்டிய தமிழகபாஜக நிர்வாகிகள், வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கும் விழாவில் ராஜ்நாத் சிங் பங்கேற்கக் கூடாது என்று புகார்தெரிவித்திருந்தனர். தவிர, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றால் ராஜ்நாத் சிங்குக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் அறிவித்திருந்தன. இதனால், எஸ்ஆர்எம் சிறப்பு பட்டமளிப்பு விழாவுக்கு வருவதை ராஜ்நாத் சிங் திடீரென ரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி கேட்டபோது பாஜக மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் கூறியதாவது:

கோடிக்கணக்கான தமிழர்கள் தெய்வமாக வணங்கும் ஆண்டாள் குறித்து ஆய்வுக் கட்டுரை என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்துகள் எங்களை பெரிதும் காயப்படுத்தின. அதைஎதிர்த்து தமிழகம் முழுவதும் அப்போதே பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

தமிழக பாஜக கோரிக்கை

இது மட்டுமின்றி, ‘மீ டூ’ இயக்கம் மூலம் பாடகி சின்மயி உள்ளிட்டோர் வைரமுத்து மீது பாலியல் புகாரும் கூறியிருந்தனர். எனவே, வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்காக நடைபெறும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று ராஜ்நாத் சிங்கிடம் பாஜக சார்பில் கோரிக்கை விடுத்தோம். இதை ஏற்று, பட்டமளிப்பு விழாவுக்கு வருவதை அவர் தவிர்த்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பல்கலைக்கழகம் மாற்று ஏற்பாடு

ராஜ்நாத் சிங் வராத நிலையில், வேறொரு முக்கிய விருந்தினரை வைத்து இன்று பட்டமளிப்பு விழாவை நடத்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய் துள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x