Published : 27 Dec 2019 08:13 PM
Last Updated : 27 Dec 2019 08:13 PM

உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பெட்டி பாதுகாப்பு: திமுக வைத்த கோரிக்கையுடன் கூட்டணிக் கட்சிகளும் வழக்கு

திமுக.சார்பில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளாட்சித்தேர்தலில் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பது குறித்த கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவைப்போன்று கூட்டணிக்கட்சிகளும் மனுத்தாக்கல் செய்துள்ளன.

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக 27 மாவட்டங்களில் 27.12.2019(இன்று) மற்றும் 30.12.2019 அன்று நடைபெற இருக்கின்றன. ஆளும் அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மூலம் திமுக தலைமைக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையருக்கு திமுக தலைமை சார்பாகவும் - மாவட்டச் செயலாளர்கள் சார்பாகவும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன.

ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை முதற்கட்ட வாக்குப் பதிவு 27.12.2019 அன்று நடைபெற்ற பிறகு 5 நாட்கள் கழித்தே வாக்கு எண்ணிக்கை 02.01.2020 அன்று நடைபெற இருக்கிறது. அதுவரை பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.

அதேபோல வாக்கு எண்ணிக்கையின் போதும், தமிழ்நாடு ஊராட்சித் தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தவேண்டிய கடமையும் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.

ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவி இடங்களுக்காக பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஒரே வாக்குப் பெட்டியில் வாக்காளர்களால் போடப்பட்டு, அவைகள் வாக்கு எண்ணிக்கையின் போது தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணப்பட வேண்டிய நிலையில், அதில் முறைகேடுகள் ஏதும் ஏற்படாத வண்ணம்,

1) தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகள், 1995ல் உள்ள விதிகள் 60 முதல் 69 வரையில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் முழுவதும் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும்.

2) வாக்கு எண்ணிக்கை முடியும் வரை உரிய காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

3) சிசிடிவி கேமரா மூலம் அனைத்து நடைமுறைகளையும் முழுமையாக கண்காணிக்க வேண்டும்.

4) வாக்கு பெட்டிகளை, வாக்குகள் எண்ணும் வரை உரிய பாதுகாப்புடன் வைத்திட வேண்டும்.

5) அப்படி பாதுகாப்புடன், வாக்குப் பெட்டிகள் வைக்குமிடத்தில் வேட்பாளர் அல்லது முகவர் பாதுகாப்பிற்காக அனுமதிக்கப்பட வேண்டும். என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்த கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக காவல்துறை தலைவர், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுக்கு மேற்கூறிய உத்தரவுகளை பிறப்பிக்கப்பட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கு தொடர்ந்துள்ளார்.

திமுக அமைப்பு செயலாளஎ ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்துள்ள பொது நல வழக்கில் வைக்கப்பட்டுள்ள அதே கோரிக்கைகளுடன் அதன் கூட்டணி கட்சியினரும் பொது நல வழக்குகள் தொடர்ந்துள்ளனர். அதன்படி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக வழக்கறிஞர் அணி செயலாளர் பார்வேந்தன், மதிமுக வழக்கறிஞர் நன்மாறன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோல சேலம் மாவட்டத்திற்காக திமுக சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தனி வழக்காக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்குகளில் மாநில தேர்தல் ஆணையர், ஆணைய செயலாளர், தமிழக டிஜிபி ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x