Last Updated : 27 Dec, 2019 03:35 PM

 

Published : 27 Dec 2019 03:35 PM
Last Updated : 27 Dec 2019 03:35 PM

விருதுநகர் மகாராஜபுரம் வாக்குச்சாவடியில் 'நகர்மன்ற உறுப்பினர் வாக்களிக்கும் இடம்' என்ற அட்டையால் குழப்பம்: ஆட்சியர் உத்தரவுக்கு பின் மாற்றம்

(இடது) நகர் மன்ற உறுப்பினர் வாக்களிக்கும் இடம் என எழுதப்பட்டிருக்கும் அட்டைக்குப் பின்னால் நின்று வாக்களிக்கும் பெண். (வலது) திருத்தம் மேற்கொள்ள உத்தரவிடும் ஆட்சியர் கண்ணன்

விருதுநகர்

விருதுநகர் மகாராஜபுரம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்யும் பெட்டியை மூடியிருக்கும் அட்டையில் 'நகர்மன்ற உறுப்பினர் வாக்களிக்கும் இடம்' என்று எழுதப்பட்டிருந்ததால் மக்கள் குழப்பமடைந்தனர்.

மதியம் வரை இத்தவறை சரி செய்யாமல் மெத்தனம் காட்டிய தேர்தல் அலுவலர்கள் ஆட்சியர் உத்தரவிட்ட பின்னர் அட்டையில் திருத்தம் மேற்கொண்டனர்.

52% வாக்குகள் பதிவு..

விருதுநகர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று முதற்கட்டமாக ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, சிவகாசி ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்காக 4 நிறங்களில் வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பிற்பகல் 3 மணி வரை சுமார் 52% வாக்குகள் பதிவாகி உள்ளன.

அட்டையால் குழப்பம்..

சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாட்சியாபுரம் வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு உட்பட்ட மகாராஜபுரம் மற்றும் ராஜபாளையம் ஒன்றியப் பகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்பொழுது மகாராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடிகளை பார்வையிட்டபோது குறிப்பிட்ட ஒரு வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு செய்யும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த அட்டையில் 'நகர்மன்ற உறுப்பினர் வாக்களிக்கும் இடம்' என்று குறிப்பிட்டு இருந்ததை கவனித்தார்.

ஏற்கெனவே காலை முதல் இந்த வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் பலர் குழப்பமடைந்தே வாக்களித்துச் சென்றிருக்கின்றனர். பிற்பகல் வரை இதை கவனிக்காமல் அதிகாரிகள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு உள்ளதால் பொதுமக்கள் சிலர் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கு வந்தபோது இத்தவற்றை வாக்காளர்களும் அவரிடம் சுட்டிக்காட்டினர். உடனே அட்டையில் திருத்தம் மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் பின்னரே அந்த அட்டை நீக்கப்பட்டு வாக்காளர்களின் குழப்பம் நீக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x