Published : 27 Dec 2019 01:20 PM
Last Updated : 27 Dec 2019 01:20 PM

அதிமுக வேட்பாளர்களுக்கு மக்கள் அமோக ஆதரவு: மதுரையில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்களுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை பொது மக்கள் வெகுவாக ஆதரித்து வருகின்றனர்.

அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. சிறந்த நிர்வாகத்தில் தேசிய அளவில் தமிழக அரசு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழக அரசு நல்லாட்சி நடைபெற்று வருகிறது என்பது உறுதியாகியுள்ளது" என ஓபிஎஸ் கூறினார்.

மதுரையில் காலை 11 மணி நிலவரப்படி 26.87% வாக்குப்பதிவாகியுள்ளது.

முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு..

தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கியது. இத்தேர்தல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

முதல் கட்டத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4,700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு போட்டியிடுபவர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடக்கிறது.

தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 24.08% வாக்குகள் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x