Published : 26 Dec 2019 09:18 PM
Last Updated : 26 Dec 2019 09:18 PM

மகப்பேறு நிதி உதவியை முறையாக வழங்காத செவிலியர் : நடவடிக்கை கோரிய வழக்கில் அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மகப்பேறு கால நிதி உதவியை பயனாளிகளுக்கு முறையாக நிதி வழங்காத செவிலியர் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பேறுகால பணப்பயன்களை அளிப்பதற்காக டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் பதிவு செய்திருந்த 350க்கும் மேற்பட்டோருக்கு நிதி முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

திட்டத்தின் படி 12 ஆயிரம் ரூபாயை தலா 4 ஆயிரம் என மூன்று தவணைகளாக வழங்கும் திட்டத்தின் கீழ் முறையாக நிதி வழங்காத கிராம சுகாதார மைய செவிலியர் ஆர்.சுமதி மீது பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த அமலா உள்ளிட்டோர் புகார் அளித்தும் செல்வாக்கு காரணமாக நடவடிக்கை எடுக்காததால், தமிழக அரசிடமும், சுகாதாரத்துறை இயக்குனரிடமும் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவும், வழங்கப்படாத பேறுகால நிதியை வழங்கவும் உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலா, ரேகா, சேர்மக்கன்னி ஆகியோர் சென்னை வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசும், செவிலியர் சுமதியும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x