Published : 26 Dec 2019 07:51 PM
Last Updated : 26 Dec 2019 07:51 PM

சுனாமி நினைவு நாளில் மீனவ பெண்களிடம் காவலன் செயலி விழிப்புணர்வு பிரச்சாரம்: ராயப்பேட்டை  உதவி ஆணையரின் வித்யாச முயற்சி

சுனாமி நினைவுதினமான இன்று கடற்கரையில் கூடிய மீனவ மக்களிடம் நடிகை கவுதமி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவைத்த உதவி ஆணையர் துண்டுப்பிரசுரம் மூலம் தானும் செயலி பற்றி விளக்கினார்.

இளம்பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சென்னை காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒருவகையாக காவலன் செயலியை அறிமுகப்படுத்தி அதை கல்லூரி மாணவிகள், இளம்பெண்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரமாக சென்னை காவல் ஆணையர் கொண்டுச்செல்லும் முயற்சியில் சென்னை காவல் ஆணையர் ஈடுபட்டு வருகிறார்.

இதை பின்பற்றி சென்னையில் போலீஸ் அதிகாரிகளும் கடைகோடி காவலர்களும் காவலன் செயலியை பொதுமக்களிடம் கொண்டுச்சேர்க்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இன்று வரை சென்னையில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காவலன் செயலியை தரவிறக்கம் செய்துள்ளனர்.

சமீபத்தில் சென்னையில் வணிகர் சங்க ஆர்ப்பாட்டத்தினூடே காவல் ஆய்வாளரும், எஸ்.ஐயும் காவலன் செயலி குறித்து பிரச்சாரம் செய்த நிகழ்வு நடந்தது. அதேப்போன்று சென்னையில் இன்று காலை சுனாமி நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. பட்டினப்பாக்கத்தில் நடந்த நினைவுநாள் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மீனவ குடும்பத்தைச் சேர்ந்தோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் நடிகை கவுதமியும் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்தினார். பாதுகாப்பு ஏற்பாட்டுக்காக வந்த ராயபேட்டை உதவி ஆணையர் பாஸ்கர் நடிகை கவுதமியிடம் காவலன் செயலி குறித்து தெரிவித்து அதை மீனவப்பெண்களிடம் விழிப்புணர்வாக பேசச்சொன்னார். கவுதமியும் அதை ஏற்றுக்கொண்டு பேசினார்.

அப்போது அனைவரிடமும் தாம் ஏற்கெனவே காவலன் செயலி குறித்து அடித்து வைத்திருந்த துண்டு பிரசுரத்தை உதவி ஆணையர் போலீஸாருடன் சேர்ந்து வழங்கினார்.

பின்னர் அனைவரையும் அழைத்து அவர்களிடம் காவலன் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என விளக்கி கூறினார். அதை மீனவ குடும்பத்தினர் ஆர்வமுடன் பார்த்தனர். உதவி ஆணையர் பாஸ்கரின் இந்த வித்யாச முயற்சியை அனைவரும் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x