Published : 26 Dec 2019 12:38 PM
Last Updated : 26 Dec 2019 12:38 PM

இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடை: இலங்கை தமிழ் அமைப்புகள் கண்டனம்

கோத்தபய ராஜபக்ச

ராமேஸ்வரம்

இலங்கையில் சுதந்திர தினத்தன்று தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற வங்காள மொழிக் கவிஞரும் சுதந்திரப் போராட்ட விரருமான ரவீந்திரநாத் தாகூர் கடந்த 1937 ஆம் ஆண்டு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார். இலங்கையின் அழகில் மயங்கிய தாகூர், 'ஸ்ரீலங்கா மாதா' என்ற வங்க மொழிப் பாடலை இயற்றினார்.

ரவீந்திரநாத் தாகூர்

பின்னாளில் ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனில் கல்வி கற்ற இலங்கை கவிஞரான ஆனந்த சமரக்கூன் ஸ்ரீலங்கா மாதா பாடலை சிங்கள மொழியில் மொழி பெயர்த்தார். பின்னர் இலங்கைக்கு ஆங்கிலேயே ஆட்சியிலிருந்து சுதந்திரமடைந்ததும் இந்தப் பாடலே இலங்கையின் தேசிய கீதமும் ஆனது.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சார்ந்த தமிழ்ப் புலவர் மு.நல்லதம்பி என்பவர் இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்தார். 04.02.1949 முதல், சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. எனினும், அதன் பின்னர் சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாடப்பட்டு வந்தது.

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியையடுத்து அதிபராகப் பதவியேற்ற மைத்ரிபால சிறிசேனா, ''இலங்கையில் சிங்கள மொழிக்கும், பவுத்த மக்களுக்கும் உள்ள அதே உரிமைகளும் சலுகைகளும், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் உண்டு. இதை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கையின் சுதந்திர தின நிகழ்வின் போதும், அரசு நிகழ்ச்சிகளிலும் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்படும்" என அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து 1949-ம் ஆண்டுக்குப் பிறகு 67 ஆண்டுகள் கழித்து இலங்கையின் 68-வது சுதந்திர தின விழா 04.02.2016 அன்று நடைபெற்றபோது சிங்கள மொழியிலும், தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. உள்நாட்டு யுத்தத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்த அங்குள்ள தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வை நீண்ட காலமாகவே புறக்கணித்து வந்த நிலையில் தேசிய கீதத்தை தமிழில் பாடுவது நல்லிணக்கத்துக்கு வழி செய்யும் வகையில் அமைந்ததாகக் கருதப்பட்டது.

ஆனந்த சமரக்கூன்

இந்நிலையில், கடந்த நவம்பர் 18 அன்று இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச நிர்வாக ரீதியாக முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளில் மாற்றம் செய்து வருகின்றார். இலங்கையின் 72-வது சுதந்திர தினம் எதிர்வரும் 04.02.2020 அன்று கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சயில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும் பாடு­வ­தற்கு கோத்தபய அர­சு தீர்­மா­னித்­துள்­ளது.

தேசிய கீதத்தைத் தமிழ் மொழியில் பாட முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x