Published : 26 Dec 2019 11:55 AM
Last Updated : 26 Dec 2019 11:55 AM

95 வயதிலும் தொய்வில்லாப் போராளி: நல்லகண்ணுக்கு ஸ்டாலின் வாழ்த்து

நல்லகண்ணுவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஸ்டாலின்

பொதுவுடைமைத் தத்துவம் நல்லகண்ணுவைப் போல இருக்கும் என, அவருடைய பிறந்த நாளில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் இரா.நல்லகண்ணு. அவர் இன்று (டிச.26) தன்னுடைய 95-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்த வயதிலும் பல்வேறு விவசாய, சாதிய ஒடுக்குமுறைப் போராட்டங்களில் இரா.நல்லகண்ணு பங்கேற்று வருகிறார்.

அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், சென்னையில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், நல்லகண்ணுவின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அவரை வாழ்த்திப் பேசினர்.

மேலும், இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தன்னுடைய முகநூல் பக்கத்தில், "பொதுவுடைமைத் தத்துவம் எப்படி இருக்கும்? எளிமையாக, கம்பீரமாக, உண்மையாக, எழுச்சி மிக்கதாக இதோ நம் முன் வாழ்கிறாரே நல்லகண்ணுவைப் போல இருக்கும்! மார்க்சியத் தத்துவத்தின் மனித உருவம் அவர்.

95 வயதிலும் தொய்வில்லாப் போராளி; இடைவிடாத உழைப்பாளி; தூய்மையான சிந்தனையாளர். நல்லகண்ணுவை வணங்குகிறேன்; இன்னும் பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து மக்களுக்கு உணர்ச்சியூட்டுங்கள்! உற்சாகமும் ஊக்கமும் தாருங்கள்! என்று அவரைப் பணிவன்புடன் வேண்டுகிறேன். திமுகவின் சார்பில், நல்லகண்ணுவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்" என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x