Published : 26 Dec 2019 10:24 AM
Last Updated : 26 Dec 2019 10:24 AM

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர்கள்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் கொடுப்பதைத் தடுப்பதற் கான முயற்சியில் புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் உள்ள 4,551 பதவிகளுக்காக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் இளைஞர்கள். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வேட்பாளர்கள் வாக்குகளை சேகரிப்பதைத் தடுப்பதற்காக இளைஞர்கள் சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு போஸ்டர்களை ஒட்டி வைத்துள்ளனர். மேலும், பலர் விழிப்புணர்வு பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

“தேர்தலில் லட்சக்கணக்கில் செலவு செய்துவிட்டு அந்தத் தொகையை பதவிக்கு வந்த பிறகு அரசு நிதியை மோசடி செய்து சம்பாதித்துவிடலாம் என்று கருதி வேட்பாளர்கள் யாரும் தேர்தலில் செலவு செய்ய வேண்டாம். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெற்று அவற்றை அலுவலர்களுக்கும், சமூக வலைதளங்களிலும் பகிர நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கும் விதமாக ஆலவயல், மறமடக்கி உள்ளிட்ட கிராமங்களில் இளைஞர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளதுடன், பேனரும் வைத்துள்ளனர்.

இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் தேர்தல் விழிப்புணர்வு போஸ்டர்களை ஒட்டியுள்ளதுடன், அதுகுறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது, பணத்தை நம்பி தேர்தலில் களம் இறங்கிய வேட்பாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஆலவயல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கூறியதாவது:

தேர்தலில் போட்டியிடுவோர் தினந்தோறும் வாக்கு சேகரிப்பின்போது பெருந் தொகையை ஆதரவாளர்களுக்கு செலவு செய்கின்றனர். மேலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவும் திட்டமிட்டு வருவதாகத் தகவல் கிடைத் துள்ளது.

இவ்வாறு செய்து பதவிக்கு வரும் இவர்கள், அரசு நிதியை மோசடி செய்வார்கள். அப்போது ஏழையின் வாழ்வு ஏற்றம் பெறாது. எனவே, இதை முன்கூட்டியே தடுப்பதற்காகவே வேட்பாளர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக ஊருக்குள் பேனர் வைத்துள்ளோம் என்றனர்.

மறமடக்கி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் செயல் இயக்க அமைப்பினர் கூறியது: மறமடக்கியில் நீர்நிலைகளைத் தூர் வாருவதற்காக இளைஞர்களைக் கொண்டு மக்கள் செயல் இயக்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக இளைஞர்கள் தங்களது வீடுகளில் ‘எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என்ற போஸ்டர்களை ஒட்டி வைத்துள்ளனர் எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x