Published : 25 Dec 2019 05:29 PM
Last Updated : 25 Dec 2019 05:29 PM

என்ஆர்சிக்கும், என்பிஆருக்கும் தொடர்பில்லை என அமித் ஷா கூறுவது உண்மைக்கு மாறானது: ஜவாஹிருல்லா கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா : கோப்புப்படம்

சென்னை,

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் தொடர்பு இல்லை, நாடாளுமன்றத்தில் என்ஆர்சி குறித்து விவாதிக்கவில்லை என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளது உண்மைக்கு மாறனது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியுரிமை திருத்த மசோதா விவாதத்தின் போது பல்வேறு உண்மைக்கு மாறான கருத்துக்களைத் தெரிவித்தார்.

இதே போன்றே டிசம்பர் 24-ம் தேதி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அமித் ஷா அளித்துள்ள பேட்டியில் " என்.பி.ஆர் என்று அழைக்கப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கும் என்.சி.ஆர் என்று அழைக்கப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக அமைச்சரவையில் எந்தவொரு விவாதமும் நடைபெறவில்லை" என்று உண்மைக்கு மாறாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதா குறித்த விவாதத்தில் அமித் ஷா பேசும் போது "குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் தொடர்ந்து தேசிய குடியுரிமை பதிவேடு திட்டம் அமல்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டிருந்தார். மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல்தான் இந்த அறிவிப்பை அவர் செய்தாரா?

அமித் ஷா குறிப்பிட்டிருப்பது உண்மைக்குப் புறம்பானவை என்பதை மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் அளித்த தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதியன்று மாநிலங்களவையில் டி.என்.சீமா எம்.பி எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜு பதில் அளித்தார்.

அதில் அவர் "தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆர்சி) முதல் நடவடிக்கை ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.

இதே போல் மக்களவையில் 2015 ஏப்ரல் 21 அன்று ராம்சிங் ரத்வா என்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி, பதிலளித்த போது, "தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்பிஆர்)ஐ பயன்படுத்தி தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) உருவாக்கப்படும்" என்று கூறினார்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை பயன்படுத்தி அதில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொருவருடைய தரவுகளைச் சரிபார்த்து தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர்கள் இருவரும் ஒருவர் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கும் தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை விவரித்திருக்கும் போது அவை இரண்டுக்கும் தொடர்பில்லை என அமித் ஷா குறிப்பிடுவது பொய்யாகும்.

நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர்கள் இருவர் அளித்த இந்த பதில்கள் முந்தைய மோடி அரசில் நிகழ்ந்தவை என்று தனது வாதத்தை அமித் ஷா நியாயப்படுத்தினால் அவர் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு 2019 ஜூலை 2019ல் வெளியிட்ட அரசு (கெஜட்) அறிவிக்கை "தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்), குடியுரிமை 2003ல் வகுக்கப்பட்ட குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கல்) விதிகள் பிரிவு (3)ன் உட்பிரிவு (4)ன் அடிப்படையில் மேம்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளதற்கு என்ன பதில் அளிக்க போகிறார்.

இந்த விதி 3 தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) தொடர்பானது. இந்த விதியின் உட்பிரிவு 4 தான் இந்தியக் குடிமக்களுக்கான தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பது குறித்த வழிவகையைச் செய்கிறது. இந்திய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற திட்டம் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது 2003ல் கொண்டு வரப்பட்ட திருத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் தேசிய மக்கள்தொகை பதிவேடு குறித்தும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களுக்கு தவறான தகவல் தந்ததற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

கேரளா மற்றும் மேற்கு வங்காள அரசுகள் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) பணிகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன. அதேபோல், தமிழக அரசு தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பான பணிகளை நடத்தக் கூடாது என்பதே தமிழகத்தின் விருப்பம்.

குடிமக்கள் திருத்தச் சட்டத்தை அரசு முறைப்படி திரும்பப் பெறும் வரையிலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் இடையில் தொடர்பில்லை என்பதை மத்திய அமைச்சரவை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்

இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x