Last Updated : 25 Dec, 2019 12:00 PM

 

Published : 25 Dec 2019 12:00 PM
Last Updated : 25 Dec 2019 12:00 PM

மாணவி ரபீஹாவை அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது; துணை வேந்தரிடம் அறிக்கை கேட்டுள்ளேன்- முதல்வர் நாராயணசாமி

மாணவி ரபீஹா

பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் இருந்தபோது, மாணவி ரபீஹாவை அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது, இதுகுறித்து துணை வேந்தரிடம் அறிக்கை கேட்டுள்ளேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் டிச.23 -ம் தேதி நடைபெற்றது. குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வரும்போது மாணவர்கள் போராட்டம் நடத்தலாம் என்ற தகவலும் வெளியானது. இதனைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு போலீஸார் கடும் கெடுபிடி விதித்தனர்.

இச்சூழலில் கேரள மாணவி ரபிஹா குடியரசுத் தலைவர் வருகைக்கு முன்பாக போலீஸாரால் அரங்கிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு தனியே அமர வைக்கப்பட்டார். குடியரசுத் தலைவர் புறப்பட்ட பிறகே விழா அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டார். எம்.ஏ. மாஸ் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் தங்கம் வென்றிருந்த போதிலும், மேடைக்கு அழைத்தபோது, அவர் தனது தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்து விட்டார். பட்டம் மட்டும் பெற்றுக்கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, இதுகுறித்துக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''புதுவைப் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ரபீஹாவை அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது. விழாவில் நான் கலந்து கொண்டிருந்தாலும் நான் அதை அறிந்திருக்கவில்லை. கருத்து வேறுபாடு உரிமை, ஜனநாயகத்தின் சாராம்சம். இது தொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தரிடம் இருந்து அறிக்கை கேட்டுள்ளேன்'' என முதல்வர் நாராயணசாமி பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x