ஆபாச படமெடுத்து மிரட்டியவரை கொன்ற இளம்பெண் கைது

ஆபாச படமெடுத்து மிரட்டியவரை கொன்ற இளம்பெண் கைது
Updated on
1 min read

செல்போனில் ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய நபரை கொலை செய்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை கிராஸ்ரோடு பகுதியில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபர் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த அம்மன் சேகர் (54) என்பது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: சேகருக்கு, 23 வயது பெண் ஒருவருடன் 5 ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

திருமண ஏற்பாடு

அந்த பெண்ணை ஆபாச படம் எடுத்து அவர் மிரட்டி வந்ததாகவும் இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு திருமண ஏற்பாடு செய்த நிலையில், அவரை திருமணம் செய்யக் கூடாது என சேகர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சேகரும் இளம்பெண்ணும் அடையாறில் சந்தித்துள்ளனர். பின்னர், சேகரின் இருசக்கர வாகனத்திலேயே புது வண்ணாரப்பேட்டை பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது கிராஸ் ரோடு பகுதியில் இருவரும் இறங்கி நின்று பேசியுள்ளனர்.

பரிசு தருவதாக கூறி..

அப்போது, பிறந்தநாள் பரிசு தருவதாக கூறி சேகரை கண்ணை மூடி நிற்கச்சொல்லி இருக்கிறார் அந்த பெண். சேகரும் கண்ணை மூடியபடி நிற்க தயாராக வைத்திருந்த, உடனே ஒட்டக்கூடிய பசையை சேகரின் கண்களில் ஊற்றி இருக்கிறார் அந்த பெண். கண்கள் சரியாக தெரியாத நிலையில் சேகர் நிலைதடுமாற, அவரை கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கிறார்.

இதையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டார். இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சேகருக்கு திருமணமாகி மகன், மகள் உள்ளனர். மகளின் கல்லூரி தோழியான அந்தப் பெண், அடிக்கடி சேகரின் வீட்டுக்குச் சென்று இருக்கிறார். அப்போதுதான் சேகருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே தவறான பழக்கம் ஏற்பட்டு, தற்போது கொலையில் முடிந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in