

ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்யும் முறைக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை தெற்கு ரயில்வே தளர்த்தியுள்ளது. இதனால் கல்விச் சுற்றுலா, திருமணம், கோயில் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் பயனடைவார்கள்.
வெளியூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட்டிகளை முன்பதிவு செய்ய பல கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே விதித்திருந்தது. மொத்த எண்ணிக்கையில் முன் பதிவு செய்யும் வசதி தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் கல்விச் சுற்றுலா, சுற்றுலா செல்வோர், திருமணம், கோயில் நிகழ்ச்சிகளுக்கு மொத்தமாகச் செல்வோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிரமம் இருந்தது.
இந்நிலையில் தெற்கு ரயில்வே ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கல்விச் சுற்றுலா, விளையாட்டுப் போட்டிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, மொத்தமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இனி எந்த வகுப்பிலும், எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதற்குத் தேவையான ஆவணங்களை அளித்து மொத்தமாக முன்பதிவு செய்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.