Published : 24 Dec 2019 03:10 PM
Last Updated : 24 Dec 2019 03:10 PM

பிளாஸ்டிக் மரங்களுக்கு மாற்றாக நிஜ மரக்கன்றுகள்; மதுரை தோட்டக்கலைத்துறை அறிமுகம்: களைகட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை

கிறிஸ்துமஸ் பண்டிகையில் பிளாஸ்டிக் மரங்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்து இயற்கையுடன் இணைந்து நிஜ கிறிஸ்துமஸ் மரங்கள் நட்டு கொண்டாடுவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நிஜ கிறிஸ்துமஸ் மரக்கன்றுகள் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக மதுரையில் தோட்டக்கலைத்துறை சார்பில் அரக்கேரியா மரக்கன்றுகள் விற்பனை தொடங்கியது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவர்கள் வீடுகள் மற்றும் தேவாலயங்களில் விலைவுயர்ந்த பிளாஸ்டிக்கால் ஆன செயற்கை கிறிஸ்துமஸ் மரங்களை வாங்கி அதனை வண்ண விளக்குகளால் அலங்கரித்து கொண்டாடுவது வழக்கம். அப்பண்டிகை முடிந்தவுடன் விலையுயர்ந்த பிளாஸ்டிக் மரங்கள் வீணாவதுடன் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்.

மேலும், தமிழக அரசு, ‘பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக்க’ பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், மக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாடுகளை குறைக்கும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதனைத்தொடர்ந்து தோட்டக்கலைத்துறை சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிளாஸ்டிக் மரங்கள் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நிஜ கிறிஸ்துமஸ் மரமான அரக்கேரியா வகையை சேர்ந்த மரக்கன்றுகள் வழங்குவதற்கு இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை தமிழகத்தில் முதல்முறையாக மதுரை தோட்டக்கலைத்துறை சார்பில் நேற்று விற்பனை தொடங்கப்பட்டது. அதனையொட்டி நேற்று மதுரை சொக்கிகுளம் உழவர் சந்தையில் கிறிஸ்துமஸ் மரக்கன்றுகள் விற்பனையை மதுரை மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கோ.பூபதி இன்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து மதுரை மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கோ.பூபதி, கூறியதாவது: கிறிஸ்துமஸ் பண்டிகையை வீடுகளில், தேவாலயங்களில் பிளாஸ்டிக் மரங்கள் மூலம் கொண்டாடுகின்றனர்.

கொண்டாட்டத்தில் பிளாஸ்டிக் தவிர்க்கவும், நிஜமான கிறிஸ்துமஸ் மரமான அரக்கேரியா மரக்கன்றுகளை நட்டு நிஜமாக கொண்டாடுங்கள் என தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை விரும்புகிறது.

அதன்படி மாநில தோட்டக்கலைத்துறை இயக்குநரின் அறிவுறுத்தல்படி நடப்பாண்டு முதல் அரக்கேரியா மரக்கன்றுகள் வழங்கி வருகிறோம். அதில் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலம் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

நடப்பில் 100 மரக்கன்றுகள் மட்டும் வழங்குகிறோம். வரும் ஆண்டு முதல் இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இந்துக் கோயில்களில் தல விருட்சமாக கோயிலுக்கேற்றவாறு சில வகை மரங்கள் இருப்பதுபோல், கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் அவர்களது வீடுகளிலும் அரக்கேரியா வகை மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கலாம்.

இந்தாண்டு மரக்கன்றாக நட்டால் சில ஆண்டில் மரமாக வளர்ந்து நிற்கும். இதன் மூலம் பிளாஸ்டிக்கை தவிர்க்கவும், இம்மரக்கன்றுகள் நடுவதன் மூலம் சுற்றுச்சூழலை காக்கலாம்.

அரக்கேரியா மரம் கூம்பு வடிவத்தில் அடுக்கடுக்காக வளரும் தன்மையுடையது. ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் உள்ளன. மலைப்பிரதேசங்களில் செழித்து வளரும். மற்ற பகுதிகளிலும் வளரும் தன்மையுடையது. இதனை தற்போது மதுரைக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x