Last Updated : 23 Dec, 2019 03:16 PM

 

Published : 23 Dec 2019 03:16 PM
Last Updated : 23 Dec 2019 03:16 PM

தங்கப்பதக்கங்களை அதிக அளவில் குவித்த மாணவிகள்; தேசத்தின் எதிர்காலத்தைக் காட்டுகிறது: குடியரசுத் தலைவர் பெருமிதம்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவிகள் அதிக அளவில் தங்கப்பதக்கம் குவித்ததைச் சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இது தேசத்தின் எதிர்காலத்தைக் காட்டுகிறது என்று பெருமிதம் தெரிவித்தார்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழா இன்று (டிச.23) பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கில் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவரும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகப் பார்வையாளருமான ராம்நாத் கோவிந்த் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு 10 பேருக்கு தங்கப்பதக்கங்களை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

"நான் வழங்கிய 10 தங்கப்பதக்கங்களைப் பெற்றவர்களில் 9 பேர் மாணவிகள். மொத்தமுள்ள 189 தங்கப்பதக்கங்களைப் பெறுவோரில் 137 பேர் பெண்கள். அதில் ஆண்கள் 52 பேர்தான். இது தேசத்தின் எதிர்காலத்தையும், தலைமைப் பண்பையும் காட்டுகிறது.

2019-20 ஆம் கல்வியாண்டில் சேர்க்கப்பட்ட 6,500 பேரில் பாதியளவில் மாணவிகள் உள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் வெளிமாநிலத்தவர்கள்.

பட்டமளிப்பு விழாவில் மாணவிக்குச் சான்றிதழ் வழங்கும் குடியரசுத் தலைவர்

பல்கலைக்கழகமாக இருந்தாலும் வேறு எந்த அமைப்பாக இருந்தாலும் இறுதியில் நாம் அனைவரும் சமூகத்தின் அங்கம்தான். சமூகத்துக்குப் பொறுப்பானவர்களாக நாம் இருக்கிறோம். பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பெரிய நிறுவனங்கள் தங்களின் லாபத்தில் ஒரு பகுதியை சமூகத்துக்குச் செலவிட அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இது விரிவாக்கப்படும் என நம்புகிறேன்.பெரு நிறுவன சமூகப் பொறுப்பிலிருந்து பல்கலைக்கழக சமூகப் பொறுப்பு என அழைக்கிறேன்.

தூய்மை இந்தியா திட்டத்தை புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதலாவதாகச் செயல்படுத்தியதுடன், விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்திடம் தந்துள்ளனர். இப்பல்கலைக்கழகமும், இணைப்புக் கல்லூரிகளும் 103 கிராமங்களைத் தத்தெடுத்துள்ளன. இவற்றை முன்மாதிரி கிராமங்களாக மேம்படுத்த முயற்சி நடைபெறுகிறது.

கிராம இளைஞர்களுக்கு உதவி செய்ய சமுதாயக் கல்லூரி ஒன்றைத் தொடங்கும் இப்பல்கலைக்கழகத்தின் செயல் சிறப்புக்குரியது.

முன்னாள் மாணவர்களின் உதவியுடன் அறக்கட்டளை நிதியம் அமைத்துள்ளது மனசுக்கு நெருக்கமாக இருக்கிறது. அவர்களும் தாராளமாக நன்கொடை தருவது இப்பல்கலைக்கழகம் சிறந்தவற்றைச் செய்ய ஊக்கம் தரும்.

சிலர் இந்த வளாக வாழ்க்கைக்கு நன்றி தெரிவித்து புதிய வாழ்வைத் தொடங்கக்கூடும். சிலர் கூடுதலாகப் படிப்பைத் தொடர்வார்கள். போட்டி நிறைந்த இவ்வுலகில் இரக்கமும், தாராள குணமும் குறைவாக இருக்கலாம். நீங்கள் அதிகம் இரக்கமுள்ளவர்களாகவும், தாராளமானவர்களாகவும் இருக்க முயற்சி செய்தால் நிச்சயமாக சமநிலையைக் காணலாம்".

இவ்வாறு குடியரசுத் தலைவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இப்பட்டமளிப்பு விழாவில் 205 ஆராய்ச்சி மாணவர்களுக்கு (131 ஆண் மற்றும் 74 பெண்), பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பி.ஹெச்.டி/ பட்ட மேற்படிப்பு/ பட்டப்படிப்பில் 117 தங்கப் பதக்கங்கள் (35 ஆண் மற்றும் 82 பெண்) வழங்கப்பட்டன. மொத்தம் 19 ஆயிரத்து 289 மாணவர்களுக்குப் பல்வேறு பிரிவுகளில் பட்டங்கள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x