

சென்னையில் திமுக நடத்திய பேரணிக்காக, லாரியைக் கொண்டு தற்காலிக மேடை அமைக்கப்பட்டது.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போன்று, எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் இருந்து இன்று (டிச.23) பேரணி தொடங்கி ராஜரத்தினம் திடலில் நிறைவு பெற்றது. இப்பேரணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இந்தப் பேரணியில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அணியினர் கலந்துகொண்டனர். பேரணியில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், இச்சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ராஜரத்தினம் திடலில் பேரணி நிறைவு பெற்றவுடன் அங்கிருந்து கலைந்து செல்லவே முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், ராஜரத்தினம் திடல் அருகே தற்காலிகமாக மேடை அமைத்து, அதில் தலைவர்களை மேடையேற்றத் திட்டமிடப்பட்டது. இதற்காக, பெரிய டிரைலர் லாரி கொண்டு வரப்பட்டு உடனடியாக மேடை அமைக்கப்பட்டது. அந்த மேடையில் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.